பதிவு செய்த நாள்
22 செப்2020
10:09
மக்களின் முழு நம்பிக்கையை பெறவும், அரசு நிர்வாகத்தில் புதுப்பொலிவை ஏற்படுத்தவும், அரசு நிர்வாகம், அரசு வழங்கும் மானியங்கள், வரி விதிப்பு, வரி வசூலிப்பு, வங்கி நிர்வாகங்கள் உட்பட, வேளாண்மை தொடங்கி, உயர் கல்வித்துறை வரை, சீர்திருத்தங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது.
அதில் முக்கிய இடம் பிடிப்பது, வருமான வரித்துறை காணும் மாற்றங்கள்.நேரடி வரித்துறையில், சமீபகாலமாக பல நடைமுறை மாறுதல்களையும், சட்ட திருத்தங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களைத் தயார் செய்து வருகின்றனர். அதே சமயம், வரி செலுத்துபவர்களும், மாறிவரும் வியாபார சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்துவதுடன், சட்ட மாற்றங்களுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பான்மையான வரிச் சட்டத்திருத்தங்களை தங்கள் நிறுவனங்களின் ஆடிட்டர்கள் பார்த்துக் கொண்டாலும், அடிப்படை வரி சம்பந்தமான உண்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால், அன்றாட பரிவர்த்தனையில் ஈடுபடுவது, தொழில் புரிபவர்கள் தான். இதனால், அது சம்பந்தமான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது, பின்னாளில் சிக்கல் வராமல் பாதுகாக்கும். ‘டி.சி.எஸ்.,- டேக்ஸ் கலெக்டட் அட் சோர்ஸ்’ முறையில், சில புதிய அறிமுகங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
டி.டி.எஸ்., டி.சி.எஸ்., மாற்றம்
‘டி.டி.எஸ்.,’ என்பது, பணம் கொடுப்பவர், செலவு அல்லது தொகையை கொடுக்கும் போதோ, பெறுபவருக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்து, அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். டி.சி.எஸ்., என்பது, பெறுபவரே, கொடுப்பவருக்காக குறிப்பிட்ட சதவீதத்தை கூடுதலாக வாங்கி கொடுப்பவர் கணக்கில் வரிச் சேகரிப்புத்தொகையாக அரசிடம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான கார் வாங்கும்போது, கார் விலையுடன், ஒரு சதவீதத்தை கூடுதலாக பெற்று வாங்குபவரின் கணக்கில் செலுத்த வேண்டும். கார் வாங்குபவர், அவரது வரித்தாக்கல் செய்யும் போது, இந்த தொகையை வரி வரவாக எடுத்து கொள்ள முடியும். கடந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட, டி.சி.எஸ்., மாற்றங்கள், வரும் அக்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன என்பதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்னிய செலாவணி உஷார்
இந்தியாவில் வசிக்கும் ஒருவர், வெளிநாடுகளில் வாழும் நெருங்கிய உறவினர்களை பராமரிப்பதற்கும், வெளிநாட்டில் மருத்துவ செலவுக்கும், பங்குகளை வாங்குவதற்கும், வெளி நாட்டில் கல்வி பயில்வதற்கும், அன்னியச் செலாவணியை வங்கிகள் வாயிலாக அனுப்ப முடியும். இது எவ்வளவு, எப்படி அனுப்பலாம் என்பது குறித்து, வரும் கட்டுரைகளில் பார்ப்போம். சுருக்கமாக சொன்னால், இந்த அன்னிய செலாவணியை கட்டுப்படுத்துவது, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் வருகிறது. சில குறிப்பிட்ட காரணங்களுக்கு, தாராளமயமாக்க கொள்கைகளின் கீழ், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி, வங்கி வாயிலாக அன்னிய செலாவணி அனுப்ப முடியும்.அக்., 1ம் தேதி முதல், இத்திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் அந்நியச்செலாவணி தொகை, ஏழு லட்சத்துக்கு அதிகமாகும் பட்சத்தில், அந்த தொகைக்கு, 5 சதவீதம் டி.சி.எஸ்., பிடித்து கட்ட வேண்டிய கடமையில், வங்கிகளும், அங்கீகரிக்கப்பட்ட அன்னியச்செலாவணி ஏஜென்டுகளும் உள்ளனர்.உதாரணமாக, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகளுக்கு, ‘கிப்ட்’ ஆக, பத்து லட்சம் ரூபாய் அன்னியச் செலாவணி அனுப்ப வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். ஏழு லட்சத்துக்கு அதிகமாக உள்ள, மூன்று லட்சம் ரூபாய்க்கு, 5 சதவீதம் டி.சி.எஸ்., ஆக, 15 ஆயிரம் பிடிக்கப்படும். அது உங்கள் கணக்கில், வரி வருவாயாக எடுத்துக் கொள்ளலாம்.
படிப்பு செலவுக்கும் டி.சி.எஸ்.,
வெளிநாட்டில் மேற்படிப்பு தொடரும் நெருங்கிய உறவினரின் கல்விச் செலவுக்கு, பணம் அனுப்புவது அடிக்கடி கேள்விப்படும் ஒன்று. பெரும்பாலும் வங்கிக்கடன் வாங்கி வெளி நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு வங்கிக்கடன் வாயிலாக அனுப்பப்படும் தொகைக்கு, டி.சி.எஸ்., பிடிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான பிடித்தம், 0.5 சதவீதம் இருந்தால் போதுமானது.உதாரணமாக, உங்கள் மகள், லண்டனில் படிக்க வங்கிக்கடன் வாயிலாக, பத்து லட்சம் அனுப்ப வேண்டுமென்றால், ஏழு லட்சத்துக்கு அதிகமாகும் தொகைக்கு, 0.5 சதவீதம் டி.சி.எஸ்., அக்., 1ம் தேதி முதல் பிடிக்கப்படும்.
வெளிநாடு பறந்தாலும்
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களின் பயணச் செலவு, மற்ற வெளி நாட்டுச்செலவு தொகையில், 5 சதவீதம் டி.சி.எஸ்., வசூல் செய்ய வேண்டிய கடமை, டூர் ஆபரேட்டர்களுக்கும், வங்கிகளுக்கும் உள்ளது. இது, அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கும், இன்பச்சுற்றுலா செல்பவர்களுக்கும் பொருந்தும். இதற்கு மேலே கூறிய ஏழு லட்சம் வரம்பு ஏதும் இல்லை.உதாரணமாக, உங்கள் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவர, மொத்தமாக 3 லட்சம் அன்னியச் செலாவணி வாயிலாக செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்கான 5 சதவீதம் டி.சி.எஸ்., வாயிலாக பிடிக்கப்படும். ‘பான்’ (நிரந்தர கணக்கு எண்) இல்லையென்றால், இது 10 சதவீதம் பிடிக்கப்படும்.கடந்தாண்டில், 10 கோடிக்கு அதிகமாக, உங்கள் நிறுவனத்தின் விற்பனை இருந்து,
அதில், ஒரே வாடிக்கையாளருக்கு, ஆண்டுக்கு, 50 லட்சத்துக்கு மேல் விற்பனை இருந்தால், பின்வரும் பிரிவுகள் பொருந்தும். புதிய பிரிவு 206(1H) யின் படி, ஒரு வாடிக்கையாளரிடம், ஒரு ஆண்டின் விற்று முதல், 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் (ஒரு விற்பனையோ அல்லது கூட்டாக சேர்த்தோ) வருமான வரியாக, 0.1 சதவீதம் வாடிக்கையாளரிடம் வசூலித்து, வரும் அக்., 1 முதல் அரசுக்கு செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் பான்/ஆதார் வழங்கத் தவறினால், டி.சி.எஸ்., 1 சதவீதம் வசூலிக்க வேண்டும். ஆனால், 2021 மார்ச் 31 வரை இந்த விகிதம், 0.075 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே பரிவர்த்தனையில், ஏற்கனவே டி.டி.எஸ்., கழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது டி.சி.எஸ்., சேகரிக்கப்பட்டிருந்தாலோ, இந்த பிரிவின் கீழ், டி.சி.எஸ்., பொருந்தாது. உங்கள் நிறுவனம் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தால், வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளருக்கு வரிச்சேகரிப்பு பிரிவு பொருந்தாது.
டி.சி.எஸ்., வரித்தாக்கல்
டி.சி.எஸ் தொகை பிடித்தம் செய்து, அடுத்த மாதத்தில், 7 நாட்களில் செலுத்தப்பட வேண்டும். டி.டி.எஸ்., போலவே, காலாண்டு டி.சி.எஸ்., படிவம் 27EQ சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான காலக்கெடு பின்வருமாறு.மாறி வரும் வரிச்சட்டங்களின் அடிப்படைகளை, ஒவ்வொரு தனி நபரும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். இதனால், பிற்காலத்தில் அபராதங்களை தவிர்க்க மட்டுமல்லாமல், வியாபார யுக்திகளை திட்டமிடவும் உபயோகமாக இருக்கும்.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|