பதிவு செய்த நாள்
08 நவ2020
21:24
கொரோனா கொள்ளைநோய், நாம் பணியாற்றும் விதத்தையே மாற்றிவிட்டது. இதற்கு முன்னால் வீட்டில் இருந்து வேலை செய்வது, தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே ஒருசில பணிகளில் தான் அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா எல்லோரையும் வீட்டில் முடக்கிப்போட்டுவிட்டது.இருப்பினும், இணையம் வழியாக வீட்டில் இருந்தோ, அல்லது எங்கே இருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கட்டுப்பாடுகள்
கடந்த எட்டு மாதங்களாக, படிப்படியாக எல்லோர் வாயிலும் ‘ஜூம் மீட்,’ ‘டீம் மீட்,’ ‘வாட்ஸ் அப் கால்’ போன்றவை விழுந்து எழுந்துகொள்ளத் தொடங்கிவிட்டன.எந்தப் பணியும் நின்றுவிடக் கூடாது, உற்பத்தி பாதித்துவிடக் கூடாது என்ற முனைப்பே, புதிய உத்திகளை நோக்கி நம்மை நகர்த்தியது. மத்திய அரசாங்கம் இதற்கு தற்போது மலர்மாலை போட்டு, பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளது.
ஐ.டி. துறை சார்ந்த பணிகளில், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.குறிப்பாக, அரசுத்துறை, மக்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில், வங்கி உத்தரவாதங்கள் வழங்கவேண்டும், ஸ்டாட்டிக் ஐ.பி., முகவரிகள் தரவேண்டும், அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இவையெல்லாம் மீறப்படுமானால், அபராதம் விதிக்கப்படும் என்றும் கொஞ்சம் பயமுறுத்தல் இருந்தது.
கடந்த வாரம், தகவல் தொழில்நுட்பத் துறை இவற்றையெல்லாம் தளர்த்திவிட்டது. இந்திய தொழில் துறையினர் அனைவரும் இதனை வரவேற்றுள்ளனர்.அரசாங்கத்துக்கும் தொழில்துறையினருக்கும் பணியாளர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளையும் லாபத்தையும் ஏற்படுத்தியுள்ள ஒரு நடைமுறையை அனைவரும் வரவேற்காமல் என்ன செய்வர்? அதேசமயம், இந்த நடைமுறை பெருமளவில் தனிநபர் பொறுப்பை உயர்த்தியுள்ளது. கண்காணிப்பையும் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது. புதிய யதார்த்தம் என்று பொருள்பட, இந்நிலையை ‘நியூ நார்மல்’ என்றே மேலை நாடுகள் குறிப்பிடுகின்றன.
புதிய யதார்த்தம் தரும் வாய்ப்புகள் என்ன? பொறுப்புகள் என்ன?
முதலில் பெரிய மகிழ்ச்சி, பணியாளர்களுக்குத் தான். நீண்ட தூரப் பயணம் கிடையாது. அதனால் ஏற்படும் எரிச்சல், அவதி, நோய்த் தொற்று அச்சம் ஆகியவை கிடையாது; டென்ஷன் கிடையாது. வீட்டுக்கு கூடுதலான, ‘குவாலிட்டி டைம்’ செலவிட முடியும்.
பெரிய லாபம்
ஆனால், வேலை செய்யாமல் டபாய்க்க முடியாது. ஒவ்வொருவருக்குமான பணிகள் தெளிவாக வரையறை செயய்ப்பட்டுள்ளன.அதை குறித்த நேரத்துக்குள், குறித்த தரத்தோடு, குறித்த முறையில் முடித்தே ஆக வேண்டும். விடுமுறை, பர்மிஷன் கிடையாது.லேட்டாக வருவதோ, காபி அருந்த படிக்கட்டு இறங்குவதோ முடியவே முடியாது.ஒருபக்கம் வீட்டுச் செலவுகள் கணிசமாக குறைந்தன என்றால், இன்னொரு புறம், தம்மைப் பற்றியே யோசிப்பதற்கான நேரமும் கூடுதலாகவே கிடைத்தது.‘தலை தெறிக்க இணையம் வழியாக குழுவினரோடு சேர்ந்து பணியாற்றுவதால், வழக்கமாக, 8 மணி நேரத்தில் முடிக்க வாய்ப்புள்ள வேலைகள், 14 மணி நேரமாக ஆகவும் செய்யலாம். ஆனால், வேலை முடியாமல் துாங்கப் போக முடியாது.
பொறுப்பும் கடமையும் கைக்கோக்கும் இடம் இது தான். உண்மையில், ஒவ்வொருவரும் தம் தனித்தன்மையை நிரூபிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் போட்டிபோடும் மனநிலையை உருவாக்கியுள்ளது இந்தப் புதிய யதார்த்தம்.தொழில் நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி, பெரிய லாபம். இந்தியாவின் பல பெரிய நகரங்களில், கடந்த 8 மாதங்களில், பல அலுவலகங்கள் மூடப்பட்டுவிட்டன.
வாடகை, மின்சாரம், தண்ணீர், பராமரிப்பு என்று செலவுகள் கட்டுப்பட்டதால், நிகர லாபம் பெருகியது.கூடவே, திறமையான பணியாளர்களின் தகுதி என்ன? பங்களிப்பு என்ன? வளர்ச்சி என்ன என்பதை அவர்களால் கணிக்க முடிந்தது.ஒரு நபரது உண்மையான மதிப்பு, இந்த இடர்க்காலத்தில் தான் நிறுவனங்களுக்கு நன்கு தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, பல நிறுவனங்கள் புதிய சலுகைகளையும், வசதிகளையும் வழங்கத் தொடங்கின. பெங்களூருவில் இருக்கும் பல ஐ.டி., நிறுவனங்கள், தங்கள் பணியாளர், வீட்டில் முறையாக உட்கார்ந்து பணியாற்ற மேஜை, நாற்காலிகளை வாங்கிக் கொள்வதற்கு அலவன்ஸ் கொடுத்தன.வீட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு கொடுத்தன. கண்களைப் பரிசோதித்துக் கொள்ள செலவு செய்தன.
ஏற்கெனவே மடிக்கணினி, இணைய வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தன. பிள்ளைகளை பார்த்துக் கொள்ள ‘பேபிசிட்டிங்’ செலவுகளை வழங்கவும் செய்தன.அரசுத் துறைக்கு, நிர்வாக ரீதியாக பெரிய நிம்மதி ஏற்பட்டது. சாலைகளில் பெருமளவு வாகனங்கள் குறைந்தன. நெரிசல் குறைந்தது. புகை குறைந்தது.அதேசமயம், கொரோனாவால் ஸ்தம்பித்துப் போன விற்பனை மற்றும் சேவைகள், தொலை துார பணிகளால் தொடர்ந்து கிடைக்கத் தொடங்கின.
அரசின் வருவாயில் பெரிய தேக்கம் ஏற்படவில்லை.உண்மையில், அரசுக்கும் தனியார் துறைக்கும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை அவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.எந்தெந்தத் துறைகளில் எல்லாம் இணையம் வழியாகவே சேவைகளை வழங்க முடியுமோ, அவற்றை தருவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் முனைப்போடு செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறைக்குள்ளும் இத்தகைய பணிகள் எவை என்பதை வகைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.அரசாங்கம் இதைச் செய்யுமானால், தனியார் துறையும் நிச்சயம் பின்பற்றியே தீரும். அதுவும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இந்தத் திசையில் பயணம் செய்யவே விரும்பும்.
எங்கேயெல்லாம் உற்பத்தி சார்ந்த, உடலுழைப்பு சார்ந்த பணிகள் உள்ளனவோ, அவற்றை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைத்து வேலைகளையும் இணையம் வழியாக செய்வதற்கான ஆட்டோமேஷன் வழிமுறைகளைக் காண வேண்டும்.இந்த கொரோனா கொள்ளைநோய், நம் வேலை, உற்பத்தி, முன்னேற்றம் தொடர்பான சிந்தனைகளையே மாற்றியமைத்துள்ளது.
கத்தி தொங்கும்
பணியாளர்கள் மீதான நம்பிக்கை, முதலாளிகளுக்குப் பெருகியிருக்க, உற்பத்தியின் மீதான கவனம் பணியாளர்களுக்குப் பெருகியிருக்கிறது.அதேநேரத்தில் பணியாளர்கள் சுரண்டப் படலாம், வேலை மீதான அவர்களுடைய அவநம்பிக்கையும், நிச்சயமின்மையும் பெருகலாம் என்ற ஹேஷ்யமும் முன்வைக்கப்படுகிறது.எந்நேரமும் பணிநீக்கம் என்ற கத்தி, தலைமீது தொங்கிக்கொண்டே இருக்கும் என்ற கருத்தும் பேசப்படுகிறது.
இது இன்னொரு உண்மையை முன்வைக்கிறது. ஒவ்வொரு பணியாளரும் தம்மைத் தவிர்க்க முடியாத நபராக தகுதிப்படுத்திக் கொள்வதே இதற்கு வழி.நிறுவனங்கள், அவர்களை கைவிடுவதனால் அடையக்கூடிய நஷ்டம் பெரிதாக இருக்குமானால், நிச்சயம், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்பும். மரியாதையும் கவுரவத்தோடும் நடத்தவே விரும்பும். இந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்றே நம்மைத் துரிதப் படுத்துகிறது கொரோனா. இதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்வதே, இந்தியாவின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத்துக்கும் நல்லது.
வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும், எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்ப்பதற்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கியுள்ள தளர்வுகள், இந்தியத் தொழில்துறை முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறி. இடரையும் ஒரு வாய்ப்பாக மாற்றுவது என்பது இதுதானோ?
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|