பதிவு செய்த நாள்
08 டிச2020
16:13
கொரோனா காலகட்டத்தில் பாதிப்புகளை சந்தித்த தொழில் துறைகளில், 'கிரில் பேப்ரிகேட்டர்ஸ்' எனும் கிரில் தயாரிப்பும் ஒன்று. கோவை மாவட்டத்தில், 4,500க்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்களும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.இத்தொழிலில் தமிழக தொழிலாளர்கள் மிகவும் குறைவு என்ற நிலையில், பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்களை நம்பியே கிரில் தயாரிப்பு பணி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கிரில் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உ.பி., பீகார் மாநில தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.தற்போது, பணிக்கு திரும்பாத அவர்களால், தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக புலம்பும் கிரில் தொழில்முனைவோர், தொழில் துறை படிப்படியாக மீண்டுவரும் இச்சமயத்தில், போதிய 'ஆர்டர்' இருந்தும் உரிய நேரத்தில் வேலையை முடிக்கவில்லை என குமுறுகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: சொந்த ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர், இன்னும் கோவை திரும்பவில்லை. அவர்கள் மீண்டும் பணிக்குவர, 50 சதவீதத்துக்கும் மேல் ஊதிய உயர்வு கேட்கின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்து வருகிறது.
தீர்வு அவசியம்
இரும்பு உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், ஆங்கிள், பட்டாவுக்கு ஒரு டன்னுக்கு, 3,000 ரூபாய்க்கு அதிகமாகவும், பாலிஷ் ராடு, பைப், இரும்பு தகடுகளுக்கு டன்னுக்கு, 7,000 ரூபாய்க்கு அதிகமாகவும் விலையேற்றம் செய்துவிட்டனர்.இதனால், இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் தொழிலாளர் பற்றாக்குறையும், மறுபுறம் மூலப்பொருட்கள் விலையேற்றமும் கிரில் தொழில் வளர்ச்சியை பாதித்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவர்களை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்கூடங்களிலும் ஊதியத்துடன் பயிற்சி அளிக்க, அரசு ஆவண செய்ய வேண்டும். விலையேற்றத்துக்கு காரணமான காரணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பரிசீலிக்க வேண்டும்
மேலும், எங்களுக்கு வாடிக்கையாளர்களாக, 5 சதவீதம் கட்டடப்பொறியாளர்களும், 95 சதவீதம் சிறிய அளவிலான பட்ஜெட் வீடுகள் கட்டும் உரிமையாளர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., பெறமுடியவில்லை. எனவே, பழைய 'வாட்' வரியான, 5 சதவீதத்தை, ஜி.எஸ்.டி.,யாக வசூலிக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வதாரத்திற்கு ஏற்ப ஊதியமும் வழங்கி அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|