பதிவு செய்த நாள்
22 டிச2020
09:25
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்று, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா. கிட்டத்தட்ட, 1,900 கிளைகள் மற்றும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டது இந்த வங்கி. தற்போது தன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, தமிழகத்தின் மீது பார்வையைத் திருப்பியுள்ளது. இது தொடர்பாக, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் அளித்துள்ள சிறப்பு பேட்டி:
கொரோனா காலத்திலும் கூட, உங்கள் வங்கி அதிக லாபம் கண்டிருக்கிறதே, எப்படி?
நாங்கள் வழங்கிய கடனுதவியின் மதிப்பு, 13 – 14 சதவீதம் அதிகரித்ததால், அதற்கேற்ப எங்களது வருமானமும் அதிகரித்தது. மேலும், வட்டி வருமானமும் உயர்ந்ததால், லாபமும் அதிகரித்துள்ளது. மாறும் வட்டி விகிதங்களை சமாளிக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 300 கோடி ரூபாயை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டியதிருந்தது. இல்லாவிட்டால், லாபம் மேலும் அதிகரித்திருக்கும்.
தமிழகத்தில் நிறைய கிளைகளை துவக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
ஆமாம். வரும் மார்ச் மாத இறுதிக்குள், நாடு முழுதிலுமாக, 150 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். அதில், 20 புதிய கிளைகள், தமிழகத்தில் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. அத்துடன், வாராக் கடன் விகிதமும் குறைவாகவே இருக்கிறது. இவை அனைத்தும் தான், தமிழகத்தின் பக்கம் எங்களது கவனத்தை ஈர்த்துள்ளன. நீங்கள் இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்போது, ங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று இடங்களில், எங்களது புதிய கிளைகள் திறக்கப்பட்டிருக்கும். தர்மபுரி, நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், விழுப்புரம், மார்த்தாண்டம் உள்ளிட்ட மேலும் பல இடங்களிலும், புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில் தற்போது, 30 கிளைகள் உள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், தமிழகத்தில் எங்களது மொத்தக் கிளைகளின் எண்ணிக்கையை, 100 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துஉள்ளோம்.
பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் வகையில், ‘கர் வாப்ஸி’ எனும், ‘தாய் வீடு திரும்புதல்’ திட்டத்தை கொண்டு வந்தீர்களே; அது வெற்றி பெற்றுள்ளதா?
இந்த திட்டத்தை, எட்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தோம். வங்கியின் சிறப்புக் குழு உறுப்பினர்கள், வெளியேறிய ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும், அவர்களது இடத்துக்கே சென்று பேசி, குறைகளைக் கண்டறிந்து, மீண்டும் எங்கள் வங்கிக்கு வரவழைத்தனர். இந்த முயற்சியால், இதுவரை மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் மீண்டும் திரும்பி உள்ளனர். இதன் மூலமாக இதுவரை, 1,500 கோடி ரூபாய் வணிகமும் கிடைத்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் மேலும், 500 கோடி ரூபாய் வணிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இது போல, வேறு ஏதேனும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்களா?
ஆமாம். மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில், ஒரு சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்தினோம். தற்கொலை மனோபாவம் கொண்டிருந்த, 1,600 விளிம்பு நிலை விவசாயிகளை சந்தித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கினோம். அத்துடன், அவர்களில் பலருக்கு கால்நடை வளர்ப்பு, சிறுதொழில் பயிற்சி உள்ளிட்ட மாற்று வருமான வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.
உங்கள் வங்கி, வாராக் கடன் பிரச்னையிலிருந்து மீண்டது எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன், மற்ற வங்கிகளைப் போலவே, எங்கள் வங்கிக்கும் வாராக்கடன் பிரச்னை இருந்தது. இதை சரிகட்டுவதற்காக, வாராக் கடன்களுக்கு ஈடான, நிதி ஒதுக்கீடு விகிதத்தை, 87.5 சதவீதமாக வைத்திருந்தோம். மேலும், தீவிர முயற்சிகளால், 22 சதவீத வாராக் கடன்களை மீட்டுள்ளோம். இதனால், வாராக் கடன் விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மார்ச் மாதத்துக்குள் நிகர வாராக் கடன் விகிதம், 3 சதவீதத்துக்கும் கீழ் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசின் வசம் இருக்கும் பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்காக, ‘நிடி ஆயோக்’ வழங்கியுள்ள பரிந்துரையில் பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறதே?
ஆமாம். இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பரிந்துரையின் மீதான இறுதி முடிவை, மத்திய நிதியமைச்சகம் தான் எடுக்கும்.தற்போது, பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில், 94 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்து உள்ளது.‘செபி’ அமைப்பின் நெறிமுறைப்படி, எந்தவொரு பொதுத் துறை வங்கியிலும், மத்திய அரசு அதிகபட்சம், 75 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்படி, பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில், மத்திய அரசு வைத்துள்ள பங்குகளில், 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகள், விற்பனைக்கு வரவுள்ளன. இதில், அடுத்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம், 10 சதவீத பங்குகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை, சாதாரண முதலீட்டாளர்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, மோசமான நிலைமை முடிவுக்கு வந்துவிட்டது. இனி வளர்ச்சிப் பாதை தான்.
ஒரு வங்கியாளர் என்ற முறையில், நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எப்படி இருப்பதாக கருதுகிறீர்கள்?
கொரோனா பரவல், சர்வதேச பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பொருளாதார வளர்ச்சி, எதிர்மறை போக்கில் உள்ளது. ஆனால், இந்த நிலைமை மாறி வருகிறது. 2021 ஜூன் மாத இறுதியில், பொருளாதார வளர்ச்சி விகிதம், இரட்டை இலக்கை எட்ட வாய்ப்புகள் உள்ளன.எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வங்கிகள் தான் துாண்டுகோலாக உள்ளன. ஆகையால், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வங்கிகளில் குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். வங்கித் துறைக்கு விரைவில் கூடுதலாக, 3 – 4 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் கிடைக்க உள்ளது. இது, பணச் சுழற்சியை அதிகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் துாண்டிவிடும் என்பதால், இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி சாத்தியமே!
– நமது நிருபர் –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|