பதிவு செய்த நாள்
10 மே2021
01:19
நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர். எனக்கு என்.எச். ஐ. எஸ்., எனும், புதிய சுகாதார காப்பீடு திட்டமருத்துவ அட்டை உள்ளது. இது அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுமா? அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுமா? அப்படி பயன் பெற்றால் எத்தனை சதவீதம் காப்பீடு வழங்கும்?
கே. மகாதேவா, கிருஷ்ணகிரி.
அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பயன்படாது. எந்தத் தனியார் மருத்துவ மனையில் பயன்படுத்தலாம் என்ற பட்டியல் அரசு வலைதளத்தில் (http://tnnhis2016.com/) கொடுக்கப் பட்டுள்ளது, பாருங்கள். பல்வேறு நவீன அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த காப்பீட்டைப் பயன்படுத்தலாம். இதில் உங்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாது. 7.5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியே சேமிப்பில் சீட்டு சேர்ந்து, அதன்மூலம் பெறும் தொகையை வங்கிக் கணக்கில் போட்டால், அதற்கு டி.டி.எஸ்., உண்டா? வங்கியில் அப்படி உண்டு என்றார்கள். மாத வருமானம், வரி கட்டிவிட்டு சேர்த்தது தானே?
டாக்டர் காமராஜ், வாட்ஸ் ஆப்.
வங்கியைப் பொறுத்தவரை, அந்தத் தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலும் வட்டித் தொகை ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தான், டி.டி.எஸ்., பிடித்தம் செய்வர். வெறுமனே ஒரு தொகையை வங்கியில் போட்டாலே, அதற்கு டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய மாட்டார்கள். மேலும், மாத வருவாய்க்கு வருமான வரி செலுத்துவது வேறு, வைப்பு நிதி ஈட்டித் தரும் வட்டிக்கு வரி செலுத்துவது என்பது வேறு. இது இரட்டை வரி விதிப்பு ஆகாது.
ஒருவர் வங்கி கணக்கில் எவ்வளவு தொகைக்கு மேலே வைத்திருந்தால் வருமான வரி கட்டவேண்டும்? அதிகபட்சம் எவ்வளவு தொகை வைத்து கொள்ளலாம், வருமான வரி கணக்கு காட்டாமல் இருப்பதற்கு?
சங்கர நாராயணன், வாட்ஸ் ஆப்.
வங்கியின் சேமிப்புக் கணக்கில் இவ்வளவு தொகை தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவருடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டாலோ, செலவு செய்யப்பட்டாலோ, அது வருமானத் துறையின் கவனத்துக்குப் போகும். அது எந்த வழியில் வந்தது, உரிய வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக என் கடன் மதிப்பீடு அறிக்கையை (சிபில் ஸ்கோர்) பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.
‘சிபில்’ (https://www.cibil.com/benefits-of-cibil-subscription) என்ற வலைத்தளத்திற்குச் சென்று, ‘No thanks. Show me my Free Annual CIBIL Report’ என்ற லிங்கைத் தட்டினால், உங்களைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்துகொள்ளவும் அதை உறுதிப்படுத்தவும் கோரப்படுவீர்கள். இதன்மூலம், ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக, சிபில் ஸ்கோர் பெற்றுக்கொள்ள முடியும்.
எனக்கு வயது 46. நான் இதுவரை வருமான வரி எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடு விற்பனை செய்த வகையில் வந்த பணம் மற்றும், என் மனைவியின் மாத சம்பளத்தை என் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்த வகையிலும் கிட்டத்தட்ட, 9 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருக்கிறேன்.நிறைய பேர், 2 லட்சத்திற்கு மேல் இருந்தாலே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று பயமுறுத்தி வருகிறார்கள். அவசியமா?
ப்ருத்திவிகுமார்.பி, சேலம்–16.
வங்கிக் கணக்கில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தாலே, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டை விற்றேன் என்று தெரிவித்துள்ளீர்கள். அதில் நீண்டகால ஆதாய வரி அல்லது குறுகிய கால ஆதாய வரி செலுத்த வேண்டிய வாய்ப்பு வந்திருக்கலாம். அப்படி வரி செலுத்த வேண்டிய அளவுக்கு லாபம் இல்லை என்றால், அதையும் தெரிவித்து, வருமான வரி, ‘நில் ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிடுவது நல்லது.
நான் ஐ.டி.எப்.சி., யில் மொபைல் கடன் பெற்றிருந்தேன். 6 மாத தவணை திட்டத்தில் வாங்கினேன். 4 மாதங்கள் செலுத்தி வந்த நிலையில் லாக் டவுன் ஏற்பட்டது. எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை. பின்னர் தளர்வுகள் வந்ததால் கடனைச் செலுத்த முயன்றேன். 2 மாதம் தரவேண்டிய பணத்தை செலுத்தினால், தடையில்லா சான்றிதழ் தருவதாக தெரி வித்தனர். நானும் பணத்தை ஜனவரி மாதத்தில் செலுத்தினேன். ஆனால், இப்போது பிப்ரவரி மாதத்திற்கான என் வங்கியில் அபராதம், 590 × 2 = 1,180 ரூபாய் பிடித்துள்ளனர். இதற்கு என்ன செய்வது?
சுடலைமுத்து, வாட்ஸ் ஆப்.
இதற்கு ‘இ.சி.எஸ்., பவுன்ஸ் சார்ஜ்’ என்று பெயர். கொரோனாவால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் கடன் ஒத்தி வைப்பை வழங்கினாலும், சில வங்கிகள் இத்தகைய அபராதங்களைத் தவறாமல் வசூலித்துவிடுகின்றன. இதை ஆர்.பி.ஐ.,யால் தடுக்க முடியவில்லை. உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கடன் பெற்ற வங்கிக் கிளையிலேயே, உங்கள் இயலாமையைச் சொல்லி, முறையிட்டு, பிடித்தம் செய்த பெனால்டி தொகையைத் திரும்பத் தரச் சொல்லிக் கோரலாம். அவர்கள் மனம் கனியவில்லை என்றால், வங்கித் துறை தீர்வாணையருக்கு புகார் அளித்து தீர்வு காணலாம்.
என் மகன், அமெரிக்க கிரீன் கார்டு பெற்று அங்கேயே வாழ்கிறார். அங்கேயே பிறந்த பேரன், பேத்திகளுக்கு, தமிழகத்தில் இருக்கும் என் வீட்டையும் காலி நிலத்தையும் எழுதி வைக்கலாம் என்று இருக்கிறேன். அவர்களால் அதைப் பயன்படுத்த முடியுமா?
ரங்கநாதன், அயப்பாக்கம்.
முடியும். தெளிவாக உயில் எழுதி, அதைப் பதிவும் செய்து வையுங்கள். கூடவே, வீடு மற்றும் காலி நிலத்தின் மூல பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், பட்டா நகல் ஆகியவற்றையும் சேர்த்து உங்கள் பிள்ளைக்குக் கொடுங்கள். இந்தச் சொத்துகளில் இருந்து வரும் வாடகைக்கும், விற்பனை செய்யும் போது கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கும், உங்கள் வாரிசுகள் இந்தியாவில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியப் பெற்றோரிடம் இருந்து சொத்துகளைப் பெறும் அமெரிக்க பிள்ளைகள், அதற்கான எஸ்டேட் டாக்ஸ் அல்லது வாரிசுரிமை வரி (இன்ஹெரிடன்ஸ் டாக்ஸ்) அமெரிக்காவில் செலுத்த வேண்டாம். ஆனால், இத்தகைய சொத்துகள் உள்ளன என்பதை அவர்கள் அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ–-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|