பதிவு செய்த நாள்
16 மே2021
19:45
கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில், மருத்துவ காப்பீடு பெறும் போது பாலிசி பலன்கள் தொடர்பான முக்கிய அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.
இந்தியா முழுதும் கொரோனா இரண்டாம் அலை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். பொதுவாக மருத்துவ காப்பீடு பாலிசி பெறும் போது, பாலிசி அளிக்கும் பலன்கள் தொடர்பான முக்கிய அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அந்த வகையில், தற்போதைய சூழலில் மருத்துவ காப்பீடு பாலிசி வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், போதிய பலனை உறுதி செய்து கொள்ள, கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
காத்திருப்பு காலம்
மருத்து காப்பீடு பாலிசிகள் காத்திருப்பு காலம் கொண்டிருக்கும். பாலிசியில் உள்ள சில பலன்கள் அல்லது முழு பலன்கள் காத்திருப்பு காலத்தில் பொருந்தாது. கொரோனா பாதிப்புக்கும் காத்திருப்பு காலம் உண்டு. ஒரு வாரம் முதல், ஒரு மாதம் வரை இந்த காலம் அமையலாம். இது, நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, பாலிசியை தேர்வு செய்யும் முன், கொரோனா காத்திருப்பு கால அளவை பரிசீலித்து, சிறந்த வாய்ப்பை கொண்ட பாலிசியை நாடுவது ஏற்றது.
அதே போல, கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள் போன்றவற்றுக்கான செலவையும் மனதில் கொள்ள வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் இந்த செலவுகள் வருவதில்லை.
எனினும், தற்போது ஒரு சில காப்பீடு நிறுவன பாலிசிகள் இந்த பலனையும் அளிக்கின்றன. இந்த அம்சத்தையும் கவனமாக பரிசீலிக்க வேண்டும். மேலும், வீட்டு சிகிச்சைக்கான வாய்ப்பு பாலிசி கீழ் வருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதர அம்சங்கள்
மருத்துவமனையில் இடம் இல்லாத சூழல் அல்லது மருத்துவர்கள் ஆலோசனைபடி, வீட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைக்கும், 'கவரேஜ்' கொண்ட பாலிசி ஏற்றதாக அமையும்.
இத்தகைய வசதி பாலிசியில் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.ஒரு சில பாலிசிகள், கொரோனா வீட்டு சிகிச்சைக்கான பாதுகாப்பையும் அளிப்பதாக அமைந்துள்ளன. ஆக்சிமீட்டர், ஆக்சிஜன் ஏற்பாடு ஆகிய அம்சங்களும் இதில் இடம் பெற வேண்டும். கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப் பட்டவர் எனில், காப்பீடு பெற விண்ணப்பிக்க குறிப்பிட்ட காலம் வரை காத்திருக்க வேண்டும்.
'கூலிங் பீரியர்ட்' என குறிப்பிடப்படும் இதற்கான காலம் ஆறு மாதம் வரை இருக்கலாம். இந்த அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும்.கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மருத்துவ காப்பீடு பாலிசி பெற்றிருக்கவில்லை எனில் உடனடியாக பெறுவது நல்லது. மேலும், மருத்துவமனை அறை வசதி தொடர்பான பாலிசியின் வரம்புகள் குறித்தும் கவனிக்க வேண்டும்.
சில பாலிசிகள் தனியறை சிகிச்சை வசதி அளிக்கலாம். இதற்கேற்ப பிரிமியம் தொகையும் மாறுபடலாம். ஆன்லைனில் பாலிசி பெறுவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் அறிந்திருப்பது அவசியம். 65 வயதுக்குள் இருந்து, வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லை என்றால், மருத்துவ பரிசோதனை இல்லாமலே பாலிசி பெறலாம்.
பாலிசி பலனும் உடனடியாக அமலுக்கு வரும். மற்றவர்கள் இணையம் மூலமே தேவையான பரிசோதனை நடைமுறையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|