பதிவு செய்த நாள்
04 ஜூன்2021
19:07
மும்பை:ரிசர்வ் வங்கி அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என, அறிவித்து உள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின், பணக் கொள்கை குழு கூட்டம், கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், ‘ரெப்போ ரேட்’ எனும், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம் தற்போது இருக்கும், 4 சதவீதம் என்ற நிலையிலேயே தொடரும். அதேபோல், ‘ரிவர்ஸ் ரெப்போ’ எனும், வங்கிகள், தங்கள் வைப்புக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து பெறும் வட்டி விகிதமும், 3.35 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி தன் வட்டி விகிதத்தில் தொடர்ந்து, ஆறாவது தடவையாக எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
இதற்கு முன், கடைசியாக கடந்த ஆண்டு மே 22ம் தேதியன்று தான், வட்டி விகிதத்தில் மாறுதல்களை அறிவித்தது. அதன்பின், அதே நிலை தொடர்கிறது.ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி, 4 சதவீதமாகவே தொடரும்
* ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இன்றி, 3.35 சதவீதமாகவே தொடரும்
*ஆறாவது முறையாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை
*கடைசியாக, கடந்த ஆண்டு மே மாதம், 22ம் தேதியன்று வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது வரை இந்த நிலையே தொடர்கிறது
*பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையிலும், பணவீக்கத்தை இலக்குக்குள் வைத்திருக்கவும், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது
*நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.5 சதவீதமாக இருக்கும் என்று இதற்கு முன் அறிவித்திருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பால், அதை இப்போது, 9.5 சதவீதம் என திருத்தி அறிவித்துள்ளது
* கடந்த நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 7.3 சதவீதம் என அரசால் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பணக்கொள்கை குழு கூட்டம் இதுவாகும்
*பணவீக்கத்தை பொறுத்த வரை, நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது
*ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தை, 4 சதவீதமாக பேண வேண்டும் என்றும்; இதற்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, 2 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது
*நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சாதனை அளவாக, 600 பில்லியன் டாலரை, அதாவது, 43.80 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்
*ஒரே சமயத்தில் பலருக்கு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான, என்.சி.பி.ஐ., எனும் சேவை, ஆகஸ்ட் 1 ம் தேதியிலிருந்து, வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்,ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இத்துறையின் திறனை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. ஏற்றுமதிக்கான இலக்குடன் கூடிய மேம்பட்ட கொள்கை ஆதரவு தேவைப்படும் காலமிது. தரத்தை மேம்படுத்தும் வகையிலான கொள்கைகளை வகுக்க இது நல்ல சந்தர்ப்பமாகும்.
சந்திரகாந்த் தாஸ்.,
கவர்னர், ரிசர்வ் வங்கி
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|