பதிவு செய்த நாள்
03 அக்2021
19:28
வீட்டுக் கடனுக்கான வட்டி 6.45 சதவீதம் வரை குறைந்துவிட்டதே, வீட்டுக் கடன் வாங்கலாமா?
விஜயபாஸ்கர், பெங்களூரு.
இந்த 6.45 சதவீதம் என்பது, இன்னொரு வங்கியில் இருந்து, ‘லோன் டிரான்ஸ்பர்’ செய்து கொள்வதற்கு, ஒரு வங்கி கொடுத்திருக்கும் கவர்ச்சிகரமான சலுகை. மற்றபடி, புதிய கடனுக்கான வட்டி 6.70 சதவீதத்தில் இருந்து தான் துவங்குகிறது. இதை விட வட்டி விகிதம் குறையாது. ஆனால், உங்களது வேலை, ‘கிரெடிட் ஸ்கோர்’ ஆகியவை சிறப்பாக இருந்தால் மட்டுமே இத்தகைய சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.இந்த வட்டி விகிதங்கள், ‘ரெப்போ’ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்து வரும் மாதங்களில் ரெப்போ விகிதங்கள் உயரும் போது, வட்டி விகிதம் மாறுபடும். வட்டி குறைவாக இருக்கிறதே என வீடு வாங்காதீர்கள்.எதிர்காலத்தில் பல மடங்கு உயரும் என நம்பி, முதலீடாக கருதியும் வீடு வாங்காதீர்கள். நீங்கள் வாழ்வதற்காக மட்டுமே வீடு வாங்குங்கள்.
சிறு சேமிப்புகளின் வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கும் என நிதி அமைச்சகம் சொல்லியிருக்கிறதே? வட்டி விகிதங்கள் உயரவே உயராதா?
ஹரிஹரசுதன், கோவை.
அக்., முதல், டிச., வரையிலான காலாண்டில், சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள், கடந்த காலாண்டில் இருந்தபடியே தொடரும் என, மத்திய அரசு சொல்லியிருப்பதே பெரிய விஷயம்.மூத்த குடிமக்களுடைய வாழ்நாள் சேமிப்புகள், சிறு சேமிப்பு திட்டங்களில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதாலேயே, வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை.
அமெரிக்காவில், ‘குவான்டிடேடிவ் ஈஸிங்’ எனப்படும் தாராளப் பணப் புழக்கம் படிப்படியாக குறைக்கப்பட இருக்கிறது.இந்தியாவிலும் அக்டோபரில் பணக் கொள்கை குழு சந்திப்புக்குப் பின், ரெப்போ வட்டி விகிதங்கள் உயரலாம் என, ‘ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு’ வங்கியின் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படி உயருமானால், காலவோட்டத்தில் சிறு சேமிப்புகளின் வட்டி விகிதங்களும்அதிகமாகும்.
பண்டிகை கால ‘ஆன்லைன் ஷாப்பிங்’ சலுகைகளை நம்பி இறங்கலாமா?
கார்த்திகா சிவகுமார், கோவை.
உங்களுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை தெளிவாக பட்டியல் இடுங்கள். இதற்கு, ஆன்லைன் தளங்களின், ‘நோட்டிபிகேஷன்’ வசதியை பயன்படுத்தலாம். சல்லிசாக கிடைக்கிறது என கொட்டிக் கிடக்கும் அனைத்தையும் வாங்கி, கடன்காரர் ஆகிவிடாதீர்கள். ‘ஜீரோ இ.எம்.ஐ’ போன்ற ‘டுபாக்கூர்’ திட்டங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எந்த வங்கி அட்டையில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதை கவனித்து பயன்படுத்துங்கள். எல்லாவற்றுக்கும் மேல், இதே பண்டிகை காலத்தில் வெளிச்சந்தையிலும் பல பொருட்களின் விலை மலிவாக இருக்கும். இரண்டையும் ஒப்பிட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்.
வங்கி சேமிப்பு கணக்குகளில், ஆண்டுக்கு எவ்வளவு தொகை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்?
நல்லசிவம், பெங்களூரு.
ஓராண்டில் ஒரு வங்கி சேமிப்பு கணக்கில், 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு மேல் பரிவர்த்தனை இருக்குமானால், அது வருமான வரித் துறையினர் கவனத்துக்கு வரும். இதில், வங்கியில் போடப்படும் பணம், எடுக்கப்படும் பணம், பங்குகள், கடன் பத்திரங்கள், வைப்பு நிதி, ‘மியூச்சுவல் பண்டு’களில் செய்யப்படும் சேமிப்புகள், கிரெடிட் கார்டு செலவுகள், வெளிநாட்டு கரன்சி வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது ஆகிய அனைத்தும் அடங்கும்.
10 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்றில்லை.அதற்கு உரிய வரி செலுத்தப்பட்டதா என்பதை மட்டும் வருமான வரித்துறை கண்காணிக்கும்.
அடுக்கு மாடி குடியிருப்பு சங்கத்தின் பணத்தை, வங்கியின் வைப்பு நிதியில் போடும் பட்சத்தில், அது ஈட்டும் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் உண்டா?
நீலகண்டன், சென்னை.
வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படும், ‘கார்ப்பஸ்’ நிதி மற்றும் பராமரிப்பு கட்டணம், வருவாய் அல்ல. வங்கியில் அத்தொகை சேமிப்பாக வைக்கப்படுவதும் புத்திசாலித்தனமான முடிவே. ஆனால், வங்கி அதற்கு வட்டி தரும் போது, அது வருவாயாக கருதப்படும். அதற்கு வரி உண்டு என்பது, ‘பெங்களூரு கிளப்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
ஆனால் மற்றொரு வழக்கில், பெங்களூரில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்வாணையம், இந்த தீர்ப்பை தெளிவுபடுத்தியுள்ளது.வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்படும் கார்ப்பஸ் நிதி ஈட்டும் வட்டிக்கு வரி கிடையாது. ஆனால், வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்படும் பராமரிப்புக் கட்டணத்தின் உபரித் தொகை ஈட்டும் வட்டிக்கு வரி உண்டு. ஆனால், வருமான வரித் துறையினர், கார்ப்பஸ் நிதி ஈட்டும் வருவாய்க்கும் வரி போட வேண்டும் என்று சொல்வர். அதை சட்ட ரீதியாகவே நீங்கள் கையாள வேண்டிஇருக்கும்.
‘நாஸ்டாக் 100 இண்டெக்ஸ் பண்டு’ என்று ஒரு மியூச்சுவல் பண்டு திட்டம் ஒன்று வந்திருக்கிறதே, முதலீடு செய்யலாமா?
எஸ்.திருமலை, மின்னஞ்சல்.
ஏற்கனவே வேறு இரண்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் இரண்டு பண்டுகள், இதே வகையில் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளன. இது ‘இண்டெக்ஸ் பண்டு’ என்பதால், செலவுகளும் குறைவே. ‘நாஸ்டாக்’ என்ற அமெரிக்க பங்குச் சந்தையில், ஐ.டி., நிறுவனங்களின் பங்களிப்பு 44 சதவீதம். ஐ.டி., நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைச் சார்ந்து இயங்கும் இண்டெக்ஸ் பண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா என யோசியுங்கள். சர்வதேச அளவில் முதலீடு செய்ய விரும்பும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, இந்த பண்டு உகந்தது.
நான் ஏற்கனவே மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளேன். தற்போது, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஏற்கனவே இருக்கும் பண்டில் கூடுதல் யூனிட் வாங்கலாமா அல்லது புதிய பண்டில் முதலீடு செய்யலாமா?
பி.சரவணன், மதுரை.
நீங்கள் முதலீடு செய்துள்ள பண்டு, ஓராண்டில் நல்ல வருவாய் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதால், புதிய பண்டில் முதலீடு செய்ய வேண்டாம். எஸ்.ஐ.பி., முறையில் இதே பண்டில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். முடிந்தால், வாராந்திர எஸ்.ஐ.பி., முறையை பின்பற்றுங்கள். பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்ற – இறக்கங்கள் இருப்பதால், கொஞ்சம் உஷாராக கூடுதல் யூனிட்டுகள் ஈட்டுவதற்கு, வாராந்திர எஸ்.ஐ.பி., பயன்படலாம்.
வாசகர்களே,
நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|