பதிவு செய்த நாள்
08 அக்2021
22:21
புதுடில்லி:‘போர்டு இந்தியா’ நிறுவனம், இந்தியாவில் உள்ள அதன் இரண்டு ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த ஆலைகளை வாங்கும் முயற்சியில், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் இறங்கி உள்ளதாக தெரிகிறது.அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம், இந்தியாவில், சென்னை மற்றும் குஜராத்தில் சனாந்த் ஆகிய இடங்களில் ஆலைகளை நிறுவி, உற்பத்தியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் திடீரென இந்த இரு ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்தது.மேலும், இனி வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விற்பனையை தொடர இருப்பதாகவும் தெரிவித்தது.
போர்டு இந்தியா நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போர்டு நிறுவனத்துக்கு சொந்தமான இவ்விரு ஆலைகளையும் வாங்க, டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆலைகள், டாடா மோட்டார்ஸ் வசம் வரும்பட்சத்தில், அது போர்டு நிறுவனத்திடமிருந்து வாங்கும் இரண்டாவது வணிகமாக இருக்கும்.இதற்கு முன் போர்டு வசம் இருந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனத்தை, கடந்த 2008ம் ஆண்டில் 17 ஆயிரத்து, 250 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
தற்சமயம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, மொத்தம் மூன்று ஆலைகள் இந்தியாவில் இருக்கின்றன.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பயணியர் வாகன தயாரிப்பு வணிகத்தை தனியே பிரித்துவிடும் திட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆலைகளையும் வாங்கி, கூடுதல் முனைப்பு காட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆலைகள் எதுவும் இல்லாத நிலையில், இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என கருதுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள போர்டு ஆலையை, ‘ஓலா’ நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|