பதிவு செய்த நாள்
10 அக்2021
18:53
தங்க இ.டி.எப்., போல வெள்ளி இ.டி.எப்., அறிமுகம் ஆக இருப்பது முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பாக அமைகிறது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்க இ.டி.எப்., போலவே வெள்ளி இ.டி.எப்., நிதியை அறிமுகம் செய்ய, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அண்மையில் அனுமதி அளித்துள்ளது. தங்கம் போலவே வெள்ளியும் மதிப்பு மிக்க உலோகமாக அமைகிறது. தங்கத்தில் பல வகையில் முதலீடு செய்யலாம். நகை, நாணயம் வடிவில் வாங்குவதோடு, காகித வடிவிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு இ.டி.எப்., நிதி வடிவிலும் சாத்தியமாகிறது. ஆனால், வெள்ளியை இவ்விதமாக வாங்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், செபி தற்போது இதற்கான அனுமதி வழங்கியுள்ளது.
எளிதான முதலீடு
மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றாக இ.டி.எப்., அமைகிறது. பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதியாக இது அமைகிறது. தங்க இ.டி.எப்., நிதியை பொறுத்தவரை, பவுதீக தங்கத்திற்கு நிகராக யூனிட்களை வாங்கி முதலீடு செய்யலாம். இந்த யூனிட்கள் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும். தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப இதன் பலன் அமையும். எளிய முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக இது கருதப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகவும் உள்ளது. அண்மைக்காலமாக தங்க நிதிகளில் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது.
வெள்ளி இ.டி.எப்., நிதிகளை அளிக்க செபி அனுமதி அளித்துள்ளது, வெள்ளியில் முதலீடு செய்வதையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க இ.டி.எப்., போலவே வெள்ளி நிதிகளும், பவுதீக வடிவில் வெள்ளியை வாங்கி வைத்திருக்க வேண்டும் என செபி தெரிவித்துள்ளது. முதலீட்டு தொகுப்பை பரவலாக்க நினைப்பவர்களுக்கு, வெள்ளி இ.டி.எப்., மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது. வெள்ளியை வாங்கி வைப்பதில் இடப் பிரச்னை போன்றவை இருப்பதால், இ.டி.எப்., முதலீடு ஏற்றதாக இருக்கும்.
வெள்ளி விலை
பொதுவாக தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது; சர்வதேச நெருக்கடிகளின் போது பாதுகாப்பை அளிக்கிறது. தங்கத்தின் விலை சர்வதேச சூழலுக்கு ஏற்ப அமைகிறது. வெள்ளியின் விலையும் தங்கம் போலவே சர்வதேச சூழலுக்கு ஏற்ப அமைகிறது. தங்கத்தின் விலைக்கும், வெள்ளி விலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. எனினும் தங்கம் போல வெள்ளி அரிதானது அல்ல என்பதையும், தொழிற்சாலைகளில் பயன்படக்கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, வெள்ளியில் முதலீடு செய்வது என்பது பொருளாதாரத்தில் பங்கேற்பதாகவே அமைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளியின் விலை 64சதவீதம் அதிகரித்திருக்கிறது. வெள்ளி இ.டி.எப்., நிதியில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக அமையும் என்றாலும், முதலீட்டாளர்கள் சரியான உத்தியை பின்பற்ற வேண்டும். முதலீடு தொகுப்பில் தங்கத்தின் பங்கு, 10 முதல் 15 சதவீதம் இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இதில், வெள்ளி இ.டி.எப்., நிதியை சேர்த்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.
தங்கத்திற்கான ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சதவீதத்தை வெள்ளிக்கு ஒதுக்கலாம். இது, முதலீடு பரவலாக்கத்திற்கும் உதவும் என்று கருதப்படுகிறது. ஆனால், வெள்ளி விலைப்போக்கின் தன்மை மற்றும் அதை தீர்மானிக்கும் அம்சங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். இது தொடர்பாக முறையான ஆலோசனையை பெறுவதும் நல்லது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|