பதிவு செய்த நாள்
10 அக்2021
20:40
கிரடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தும்போது, அதன் எண் மற்றும் சி.சி.வி., எண், கார்டு காலாவதியாகும் நாள் போன்றவற்றை கேட்கின்றனர். கொடுக்கவில்லை என்றால், அந்த சேவையையோ, பொருளையோ பெற முடியாது. நாம் ஒரு முறை கொடுத்த தகவல்களை உபயோகப்படுத்தி, பிறகு அவர்கள் நம் பணத்தை எடுக்க முடியாதா?
து.இளங்கோவன், திண்டுக்கல்.
ஆன்லைனில் நீங்கள் கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, அதன் விபரங்களை யாரும் பார்க்க முடியாது. ‘128 பிட் என்கிரிப்ஷன்’ என்ற பாதுகாப்பு அம்சம், உலகில் உள்ள 90 சதவீத மின் வர்த்தக வலைத்தளங்களில் பின்பற்றப்படுகிறது.
அதாவது, ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் கொடுக்கும் கார்டு விபரங்கள், ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு, அதாவது மறைக்கப்பட்டு தான், வங்கியின் ‘சர்வர்’களுக்கு போய் சேரும். அங்கே அதை யாரும் பிரித்து புரிந்து கொள்ள முடியாது. ஒருமுறை கொடுக்கப்பட்ட விபரங்களை சர்வர்களில் சேமித்து வைத்துக்கொள்ளவும் முடியாது. அதனால், துணிந்து ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்யலாம்.
நான் ஒரு புரோக்கரிடம் ‘டிமேட் அக்கவுன்ட்’ வைத்துள்ளேன். அதை இன்னொரு புரோக்கருக்கு மாற்ற முடியுமா?
ஜி.ஜானகிராமன், மேடவாக்கம்.
முடியும். முதலில் புதிய புரோக்கரிடம் ‘டிமேட்’ மற்றும் ‘டிரேடிங் அக்கவுன்ட்’ ஆரம்பியுங்கள். பழைய புரோக்கரும், புதிய புரோக்கரும் சி.டி.எஸ்.எல்., அல்லது என்.எஸ்.டி.எல்., ஆகிய இரண்டில், ஒரே ‘டெபாசிட்டரி’யிடம் பதிவு செய்திருந்தனர் என்றால், நீங்களே உங்கள் பங்குகளை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள முடியும்.சி.டி.எஸ்.எல்., கணக்கு வைத்திருப்பவர்கள், ‘சி.டி.எஸ்.எல்., ஈசியஸ்ட்’ என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் பங்குகளை மாற்றிக் கொள்ளலாம்.
இரண்டு புரோக்கர்களும் வேறு வேறு டெபாசிட்டரிகளில் பதிவு செய்திருந்தனர் என்றால், பழைய புரோக்கரிடம் ‘டெபிட் இன்ஸ்டிரக் ஷன் ஸ்லிப்’ கொடுத்து, புதிய புரோக்கருக்கு பங்குகளை மாற்றச் சொல்லலாம். பங்குகள் புதிய புரோக்கருக்கு மாறிய பின், பழைய ‘டிரேடிங்’ கணக்கை மூடிவிடலாம்
நான் எல்.ஐ.சி.,யிலும், அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்திலும் பாலிசி கட்டி வருகிறேன். இரண்டும் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்?
எஸ்.சூர்யா, திண்டுக்கல்.
இவை இரண்டின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பும் உங்களது அதீத பாதுகாப்பு உணர்வை கண்டு வியக்கிறேன். என் கண்ணுக்கு எட்டிய வரை, வேறு எந்த நிறுவனமும் இவற்றைவிட பாதுகாப்பானவை அல்ல, நம்பகமானவை அல்ல. இவை இரண்டும் ஆண்டுக்காண்டு வலுவடைந்து வருகின்றனவே தவிர, சற்றும் சரியவில்லை.
எல்.ஐ.சி., பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைக்கப் போகிறது என்றவுடனே, அதில் முதலீடு செய்வதற்காக இன்றே காத்திருக்கும் எண்ணற்ற சாதாரணர்கள் உண்டு. அந்த அளவுக்கு இவற்றின் மதிப்பு உசத்தியானவை.
அடுத்த ஆண்டுடன் என்னுடைய மூன்றாண்டு வைப்பு நிதி முதிர்வு அடைகிறது. வட்டியோடு முதலீடு திரும்ப வரும் அந்த ஆண்டுக்கான வட்டியை மட்டும், வருமான வரி படிவத்தில் காட்ட வேண்டுமா? அல்லது மொத்த வட்டியையும் வருவாயாகக் காண்பிக்க வேண்டுமா?
என்.திருச்செல்வம், மின்னஞ்சல்.
உங்கள் வட்டிக்கான டி.டி.எஸ்., ஒவ்வோர் ஆண்டும் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், நீங்கள் அந்தந்த ஆண்டுக்கான வருமான வரி படிவத்தில் வட்டியை வருவாயாக காண்பித்து, செலுத்திய டி.டி.எஸ்., தொகைக்கான விலக்கு பெற முடியும். ஒருவேளை, மூன்றாண்டுகளும் வட்டிக்கான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படவில்லை என்றால், முதிர்வுத் தொகையோடு வரும் வட்டியை, ‘இதர வருவாய்’ என்ற பிரிவில் காண்பித்து, உங்கள் வரி அடுக்குக்கு ஏற்ப, வரி செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி வீடுகளில் ‘பில்டர்’கள், ‘கார்பஸ் பண்டு’கள் வசூல் செய்யும் போது, 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் சேர்த்து வசூல் செய்கின்றனர். ஆனால், சங்கம் வசூல் செய்யும் போது, ஜி.எஸ்.டி., இல்லாமல் நேரிடையாக கார்பஸ் பண்டு மட்டும் வசூல் செய்கின்றனர், எது சரி?
சூரியநாராயணன், வாட்ஸ் ஆப்.
இதில் நிறைய குழப்பம் உள்ளது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. யார் கார்பஸ் நிதியை வசூல் செய்தாலும், ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என்ற இடத்துக்குத் தான் நாம் வந்து கொண்டு இருக்கிறோம்.
‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தில், என்னுடைய ‘நான் கன்வெர்ட்டிபிள் டிபஞ்சர்’ முதலீடு முதிர்வு அடைந்து, ஓராண்டு காலம் ஆகிறது. இதுவரை முதலீடு செய்த தொகையும், வட்டியும் கிடைக்கப் பெறவில்லை. எப்போது கிடைக்கும்?
பழனி, சென்னை.
தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், அடுத்த ஐந்து மாதங்களில், 20 ஆயிரம் டிபஞ்சர்தாரர்களுக்கும், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ‘ஆதம் இன்வெஸ்மென்ட் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர்’ எனும் நிறுவனம், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ள இருக்கிறது. அதன் பின், என்.சி.டி., முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
தேசிய பங்குச் சந்தை, மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறதா?
துர்கா, வாட்ஸ் ஆப்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் அனுமதியுடன் நிர்வகிக்கப்படுவதே தேசிய பங்குச் சந்தை. இதில், எல்.ஐ.சி., – எஸ்.பி.ஐ., – ஐ.எப்.சி.ஐ., – ஐ.டி.எப்.சி., போன்ற உள்நாட்டு நிறுவனங்களும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. அரசாங்க நிறுவனமாகவே இருக்கும் ஒரே பெரிய பங்குச்சந்தை, சீனாவின் ‘ஷாங்காய் பங்குச் சந்தை’ மட்டுமே.
பணி ஓய்வுக்குப் பின் பயன் தரும் நல்ல மியூச்சுவல் பண்டுகள் எவை?
ராஜ்குமார், வாட்ஸ் ஆப்.
பல்வேறு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 25 ஓய்வூதிய மியூச்சுவல் பண்டுகளை வழங்கி உள்ளன. இவற்றில், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் உள்ளவை 10 பண்டுகள்; மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 9 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான வருவாயை பல பண்டுகள் தந்துள்ளன. அவற்றில் உங்களுக்கு பொருத்தமானதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது தகுதி பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகலாம்.
வாசகர்களே,
நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph:98410 53881
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|