பதிவு செய்த நாள்
06 ஜன2022
20:54
மும்பை:கடந்த இரண்டு ஆண்டுகளில், ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.
ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன், அங்கே ஒரு கணக்கை நாம் துவக்குவது போல, பங்குச் சந்தை முதலீட்டுக்கு டிமேட் கணக்கு துவக்க வேண்டும்.கடந்த காலங்களில், ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கினால், அதற்கு சான்றாக, காகிதத்திலான சான்றிதழை வழங்குவர். இதில் பலவிதமான சிரமங்கள் இருந்தன. கிழிந்துபோவது, தொலைந்துபோவது, தீயில் எரிந்து போவது என பல அபாயங்கள் இவற்றில் உண்டு.
இதற்கு மாற்றாக, மின்னணு வடிவில் சான்றிதழ்களை வைத்துக் கொள்வதற்கான கணக்கு தான் டிமேட் கணக்கு.கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு கணக்கு துவக்கப்பட்டதோ, அது இப்போது இரு ஆண்டு களிலேயே துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஜய் தியாகி மேலும் கூறியதாவது:கடந்த 2019 மார்ச் மாதத்தில் 3.6 கோடி டிமேட் கணக்குகள் இருந்த நிலையில், கடந்த 2021 நவம்பரில் அது 7.7 கோடி கணக்குகளாக அதிகரித்துள்ளது.கொரோனா காரணமாக ஊரடங்குகள் பிறப்பிக்கப்படவும், லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற துவங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, பங்குச் சந்தை முதலீட்டுக்குள்ளும் அவர்கள் நுழைந்தனர். அப்படி டிமேட் துவங்கியவர்களில் 75 சதவீதம் பேர், 30 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த 2019 – 2020ம் நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக நான்கு லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டன.
இது மேலும் அதிகரித்து, கடந்த ஆண்டு நவம்பரில் மட்டும் அதிகபட்சமாக 29 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன.இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|