பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:10
புதுடில்லி : அண்மைக் காலமாக, உள்ளீட்டு பொருட்களுக்கான விலை அதிகரித்து வருவதை அடுத்து, கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளன. அடுத்து, நுகர்பொருள் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்கும் விதமாக, நுகர்பொருள் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 5- – 10 சதவீதம் அளவுக்கு விலை அதிகரிக்க உள்ளன. இந்த விலை உயர்வு, இம்மாதமே அமலுக்கு வரலாம் அல்லது பட்ஜெட்டுக்கு பின், மார்ச் மாதத்திலிருந்து வரலாம் எனக் கூறப்படுகிறது.இதையடுத்து, ஏர்கண்டிஷனர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றின் விலை மேலும் அதிகரிக்க கூடும்.
ஏற்கனவே பானாசோனிக், எல்.ஜி., போன்ற நிறுவனங்கள் விலையை உயர்த்தி விட்டன. ‘ஏர்கண்டிஷனர்’கள் விலை 8 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்களான சோனி, ஹிட்டாச்சி, கோத்ரெஜ் அப்ளையன்சஸ் போன்ற நிறுவனங்கள், முதல் காலாண்டின் இறுதியில் விலையை உயர்த்தும் என தெரிகிறது.
ஜனவரி – மார்ச் காலகட்டத்தில் 5 – 7 சதவீதம் வரை விலை அதிகரிக்கலாம் என, நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்களின் சங்கமான சி.இ.ஏ.எம்.ஏ., தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வு, உலகளவிலான போக்குவரத்து செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருவது போன்றவற்றால், விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என, இத்துறையினர் கருதுகின்றனர்.
பண்டிகை கால விற்பனைக்காக, விலை உயர்வை பல நிறுவனங்கள் தள்ளி வைத்திருந்த நிலையில், விரைவில் விலை உயர்வு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|