பதிவு செய்த நாள்
12 பிப்2022
23:48
மும்பை,:அனில் அம்பானிக்கு, பங்குச் சந்தை உள்ளிட்ட நிதி சந்தைகளில் பங்கேற்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தடை விதித்துள்ளது.அத்துடன், ‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்துக்கும், அதில் உயர் பதவிகளில் உள்ள அமித் பாப்னா, ரவீந்திர சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகிய மூன்று நபர்களுக்கும் இதே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறி, இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக, செபி தெரிவித்துள்ளது. மேலும், செபியின் 100 பக்கம் கொண்ட இடைக்கால உத்தரவில், அனில் அம்பானி உள்ளிட்ட தடை விதிக்கப்பட்டவர்கள், செபியில் பதிவு செய்துள்ள நபர்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் இயக்குநர்கள், புரமோட்டர்கள் என யாரிடமும் தொடர்புவைத்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 – 2019ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், பல நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியது குறித்து விரிவான விசாரணையில், செபி ஈடுபட்டு உள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், மிகவும் பலகீனமான நிதி நிலை கொண்ட நிறுவனங்கள் பலவற்றுக்கு கடன் வழங்கியதாகவும்; இதில் அனில் அம்பானியுடன் முதலில் குறிப்பிட்ட மூவரும் உடன் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த கடன் பெற்ற நிறுவனங்கள், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்துடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், நிதியை மடைமாற்றும் ஒரு வழியாக பயன்பட்டுள்ளன.இதில் சம்பந்தப்பட்ட 28 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழங்கிய கடன்களின் அளவு, 2018 மார்ச் 31 ல், 900 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 மார்ச் 31ல், 7,900 கோடியாக அதிவேகமாக அதிகரித்துள்ளது என்றும் செபி தெரிவித்துள்ளது.மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறி, ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது, செபி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|