பதிவு செய்த நாள்
12 பிப்2022
23:52
புதுடில்லி:வாகன தயாரிப்பு மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறைக்கான, பி.எல்.ஐ., எனும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ், ஊக்கத் தொகையைப் பெற தகுதியுடைய நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில், ‘டாடா மோட்டார்ஸ், சுசூகி, ஹூண்டாய்,போர்டு, கியா, மகிந்திரா அண்டு மகிந்திரா’ உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.இது குறித்து, கனரக தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:அரசின் இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் 45 ஆயிரத்து, 16 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்காக, மொத்தம் 115 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. ‘அசல் உபகரண உற்பத்தியாளர்கள்’ ஊக்கத் திட்டத்தின் கீழ் 20 விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பிரிவில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் சேர்க்கப்பட வில்லை.இந்த 20 நிறுவனங்கள் பட்டியலில், ‘அசோக் லேலண்டு, ஐஷர் மோட்டார்ஸ், போர்டு இந்தியா, ஹூண்டாய், கியா, மஹிந்திரா சுசூகி இந்தியா’ உள்ளிட்டவை அடங்கும்.
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், ‘பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டி.வி.எஸ்., மோட்டார்’ போன்றவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘வாகனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள்’ பிரிவிலும் பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 18 சதவிதம் வரையிலான ஊக்கத் தொகையானது, புதிய முதலீடுகளைச் செய்வதற்கு, தொழில் துறையை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|