பதிவு செய்த நாள்
10 மார்2022
00:30
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும், உக்ரைன் –ரஷ்யா போர் சூழல் காரணமாக, நடப்பு நிதியாண்டில், பங்கு வெளியீட்டுக்கு எல்.ஐ.சி., வருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆயுள் காப்பீட்டு துறையில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதியன்று விண்ணப்பித்திருந்தது.இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, தற்போது செபி அனுமதி வழங்குவதாக அறிவித்து உள்ளது. செபி அனுமதி கிடைத்துவிட்டாலும், போர் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில், எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு வருமா என்ற கேள்வி சந்தையில் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
உலகளவிலான பங்குச் சந்தைகளில், போர் காரணமாக ஏற்ற – இறக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. அது இந்திய பங்குச் சந்தைகளிலும் கடுமையாக பிரதிபலித்து வருகிறது.மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் விலை அதிகரிப்பு ஆகியவையும் பங்குச் சந்தையை பாதிக்கும் அம்சங்களாக தற்போது உள்ளன.அத்துடன், சமீபகாலமாக, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தையிலிருந்து தங்களுடைய முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும், இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வெளியே எடுத்து உள்ளனர்.இவை போன்ற காரணங்களால், எல்.ஐ.சி.,யின் புதிய பங்கு வெளியீடு, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப் போகக்கூடும் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, தேவைப்படும் பட்சத்தில், மறுஆய்வு செய்ய அரசு தயாராக இருக்கிறது’ என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்
* இந்திய பங்குச் சந்தை வரலாற்றில், இதுவரை இல்லாத மிகப்பெரிய புதிய பங்கு வெளியீடு, எல்.ஐ.சி., நிறுவனத்தினுடையதாக இருக்கும்
* இதற்கு முன்பாக, 2021ல் ‘பேடிஎம்’ நிறுவனம், 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயையும்; 2010ல் ‘கோல் இந்தியா’ 15 ஆயிரத்து 500 கோடி ரூபாயையும்; 2008ல் ‘ரிலையன்ஸ் பவர்’ 11 ஆயிரத்து 700 ரூபாயையும் திரட்டி உள்ளன
* இதுவரை பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, வேறு எந்த நிறுவனத்துக்கும் இவ்வளவு விரைவாக செபி வழங்கியதில்லை. முதன் முறையாக, விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள்ளாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
* இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, மத்திய அரசு, தன்வசம் இருக்கும் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 31.62 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது
* பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, அரசுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
* எல்.ஐ.சி.,யின் 100 சதவீத பங்குகளும் அரசின் வசமே உள்ளன. கிட்டத்தட்ட 632.49 கோடி பங்குகள் அரசிடம் உள்ளன. இந்த பங்குகள் 10 ரூபாய் முகமதிப்பு கொண்டவையாகும்
* பங்கு வெளியீட்டின் போது, எல்.ஐ.சி., ஊழியர்கள், அதன் பாலிசிதாரர்கள் ஆகியோருக்கு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
* செபிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் எல்.ஐ.சி., அதன் சந்தை மதிப்பை குறிப்பிடவில்லை. இருப்பினும், கிட்டத்தட்ட 16 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது
* மார்ச் மாதத்துக்குள் எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு வராவிட்டால், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டுக்கான அதன் பங்குவிலக்கல் இலக்கான 78 ஆயிரம் கோடி ரூபாயை, எட்ட இயலாமல் போய்விடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|