பதிவு செய்த நாள்
13 மார்2022
21:28
காப்பீடு அவசியத்தை பெரும்பாலானோர் உணர்ந்திருப்பதால், காப்பீடு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீடு பாலிசிகளை பெற்றிருக்கலாம். இவர்களில் பலரும் வரி சேமிப்பு நோக்கில் பாலிசியை வாங்கியிருக்கலாம்.
பாலிசி மூலம் வரி சேமிப்பு பெறலாம் என்றாலும், வரி சலுகையை மட்டும் மனதில் கொண்டு பாலிசியை தேர்வு செய்வது தவறானதாக கருதப்படுகிறது. இவை செலவு மிக்கதாகவும், தேவையில்லாததாகவும் அமையலாம். பாலிசியை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் வருமாறு:
பாதுகாப்பு:
ஆயுள் காப்பீடு என்பது பல வகையான பாலிசிகளை கொண்டது. அவற்றில் கவரேஜ் எனப்படும் பாதுகாப்பு அளவு மாறுபடும். பாலிசி பெறும் போது, வரிச் சலுகையை விட, பாதுகாப்பு அளவு முக்கியம். பொதுவாக ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு காப்பீடு பாதுகாப்பாக இருப்பது நல்லது என வலியுறுத்தப்படுகிறது.
பலன் என்ன?
முதலீடு அம்சம் கொண்ட பாலிசி எனில் அதன் மூலமான பலனை ஆய்வு செய்வது அவசியம். யுலிப் பாலிசிகளில் பாதுகாப்பை விட பலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இவை தரும் பலன் சந்தை போக்கு சார்ந்தது. மேலும் என்டோமென்ட் பாலிசிகள் அளிக்கும் பலன் 6 சதவீதம் வரை இருக்கலாம்.
காப்பீடு தொகை:
பாலிசி முடிந்த பின், பாலிசிதாரர் அல்லது நாமினிக்கு உரிய தொகை எப்படி கிடைக்கும் என்பதையும் அறிய வேண்டும். ‘சம் அஷ்யூர்டு’ தொகை முதிர்வு காலத்தில் மொத்தமாக அளிக்கப்படுமா அல்லது பகுதி பகுதியாக அளிக்கப்படுமா என்பது போன்ற விபரங்களையும் அறிய வேண்டும்.
சரண்டர் மதிப்பு:
முதிர்வு காலத்திற்கு முன் பாலிசியை ஒப்படைத்தால் கிடைக்கும் தொகை சரண்டர் மதிப்பாக அமைகிறது. பலவித காரணங்களுக்காக பாலிசியை ஒப்படைக்கலாம். இந்த மதிப்பு பாலிசிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். பாலிசி அளிக்கும் சரண்டர் மதிப்பு என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆய்வு தேவை:
வரிச்சலுகைக்காக மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பாலிசி பெறுவதற்கு பதில், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சரியான பாலிசியை தேர்வு செய்வது அவசியம். வரிச் சேமிப்புடன், காப்பீட்டிற்கான தேவை நிறைவேறுவதும் முக்கியம். இதற்கு முறையான ஆய்வு அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|