பதிவு செய்த நாள்
21 மார்2022
01:24
வங்கிகளில் நிரந்தர வைப்பிற்கு, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு என்பது என்ன? நாம் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், அந்த தொகை முழுதும் கிடைக்குமா?
வெங்கடேஸ்வரன், மின்னஞ்சல்.
‘டிபாசிட் இன்சூரன்ஸ் அண்டு கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன்’ என்பது, இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பு. வாடிக்கையாளர் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப, ஒவ்வொரு வங்கியும் இந்த அமைப்புக்கு பிரீமியம் செலுத்தி வர வேண்டும். ஒருவேளை அந்த வங்கி மூழ்கிப் போகுமானால், வாடிக்கையாளருக்கு 5 லட்சம் ரூபாய் வரை பணம் திரும்ப தரப்படும். இதை, மேற்சொன்ன கார்ப்பரேஷன் வழங்கும்.
இதில், 5 லட்சம் ரூபாய் என்பது, அதிகபட்ச தொகை. கணக்கில் அசலும், வட்டியும் சேர்த்துக் கொள்ளப்படும். ஒரு வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு, வைப்பு நிதி ஆகிய மூன்றையும் வைத்திருந்து, ஒருவேளை அந்த வங்கி மூழ்கினால், இம்மூன்றின் இருப்பும், வட்டியும் மொத்தமாக கணக்கிடப்பட்டு, அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தரப்படும்.
ஆனால், இதே நபர், வேறு வேறு வங்கிகளில், இதேபோன்று முதலீடு செய்திருந்தால், அந்த இரண்டு வங்கிகளும் மூழ்கிப் போனால், அப்போது, தனித்தனியாக 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை பெறலாம். மேலும், மனைவியோடு கூட்டுக் கணக்கு, மைனர் மகனுக்கு கார்டியனாக இன்னொரு கணக்கு, ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக மற்றொரு கணக்கு, பிறிதொரு நிறுவனத்தின் இயக்குனராக ஒரு கணக்கு ஆகியவற்றை வைத்திருந்தால், ஒவ்வொன்றுமே தனித்தனி கணக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, வங்கி திவாலானால், ஒவ்வொரு கணக்குக்கும், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். இதனால் தான், முதலீட்டை பல்வேறு வங்கிகளில் பிரித்துப் போடுங்கள். ஒரே வங்கியிலும் பல்வேறு விதங்களில் பிரித்துப் போடுங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட, அனைத்து வங்கிகளில் உள்ள முதலீடுகளுக்கும், இந்த காப்பீடு பொருந்தும்; கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு, இந்தக் காப்பீடு கிடையாது.
மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். நான் தற்போது ஓமனில் வேலை செய்து வருகிறேன். இங்கு இருந்து முதலீடு செய்ய முடியுமா? நான் என் திருமணத்திற்கு வேண்டி முதலீடு செய்ய விரும்புகிறேன்.
ராம்பிரசாத், மின்னஞ்சல்.
தாராளமாகச் செய்யலாம். என்.ஆர்.ஓ., என்.ஆர்.இ., அல்லது எப்.சி.என்.ஆர். கணக்கை ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கக்கூடும். மியூச்சுவல் பண்டு வலைதளங்களில் போய், இந்த வங்கிக் கணக்கு விபரங்களைக் கொடுத்து, உங்களுடைய தற்போதைய வெளிநாட்டு முகவரிக்கான ஆதாரம், சமீபத்திய புகைப்படம், பான் அட்டையின் அட்டஸ்டட் பிரதி போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு சில சமயங்களில், ஒரு சில மியூச்சுவல் பண்டுகள், உங்களுடைய விபரங்களை நேரடியாக சரிபார்க்க விரும்பலாம்.
அருகே உள்ள இந்திய துாதரகத்துக்கு போய் இந்த விபரத்தை உறுதி செய்யலாம் அல்லது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரம் கொடுத்து, அவர் வாயிலாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். இப்போது இவையெல்லாம் இணைய வாயிலாகவே கிடைக்கிறது. பல்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் வலைதளங்களை ஆராயுங்கள். உங்கள் திட்டமிடல், உங்கள் இலக்கை எளிதாக அடைய உதவும்.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து பென்ஷன் வாங்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு, இந்த முறையும் பென்ஷன் தொகை உயர்த்தவில்லை என்று நினைக்கிறேன். உண்மையான நிலை என்ன என்று தகவல் சொல்ல முடியுமா?
சுகுமாரன், தாம்பரம்.
உயர்த்தவில்லை. ஆனால், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், எல்.ஐ.சி., பென்ஷன் பண்டு ரெகுலேடரி அண்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆகியவற்றை அழைத்திருப்பதோடு, ஒரு சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், தொழிலாளர் மையங்கள், தனியார் பொருளாதார நிபுணர்கள், காப்பீட்டு கணிப்பாளர்களையும் அழைத்து, பி.எப்., பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கான ஆலோசனைகளையும், நடைமுறை திட்டங்களையும் வகுத்துத் தரச் சொல்லி இருக்கிறது.
தொழிலாளர் துறைக்கான பார்லி., நிலைக்குழு, சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூட, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் பென்ஷன் போதவே போதாது என்று தெரிவித்து உள்ளது. இத்தனை ஆண்டுகளாக திரட்டப்பட்ட பெரும் தொகை, நல்ல லாபம் ஈட்டும் முதலீட்டு இனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்குமேயானால், இப்படிப்பட்ட சிக்கல் ஏற்பட்டிருக்காது.
வெளிநாடுகளில், அவர்கள் பல நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து, லாபம் ஈட்டி, உள்நாட்டில் ஓய்வூதியர்களுக்கு பணம் தருகின்றனர். இந்த விஷயங்களில், நாம் இன்னும் வேகமாக முன்னேறி இருக்க வேண்டும்.
அமெரிக்க மத்திய வங்கி, கால் சதவீதம் வட்டியை உயர்த்தியுள்ளதே? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு வரும்?
ஸ்ரீகாந்த் மணி, பெங்களூரு.
கால் சதவீத வட்டி உயர்வு எதிர்பார்க்கப்பட்டதே. அதனால், இந்திய பங்குச் சந்தை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் வட்டி விகிதம் 1.75 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிவித்து இருப்பது கவலை அளிக்கிறது. அங்கே, பணவீக்கம் 7.9 சதவீதத்தை தொட்டுவிட்டதால், அதைக் கட்டுப்படுத்துவது அவசர அவசியம். அதனால், இத்தகைய கடுமையான வட்டி உயர்வுகளை அந்நாடு எடுக்க வேண்டியுள்ளது.
இதனால், இந்தியாவில் முதலீடு செய்த அந்நிய முதலீட்டாளர்கள், திரும்பிப் போய்விடக் கூடும். இந்தியாவிலும், கடந்த பிப்ரவரி மாத பணவீக்கம் 6.07 சதவீதத்தை தொட்டுவிட்டது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பணக் கொள்கைக் குழு சந்திப்பில், அமெரிக்காவைப் பின்பற்றி, கால் சதவீத வட்டி உயர்வு அறிவிக்கப்படலாம். வளர்ச்சி முக்கியமா, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது முக்கியமா என்ற கேள்வியில், படிப்படியாக உலக நாடுகள், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் முக்கியம் என்ற இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தனிநபர்களை பொறுத்தவரை இதன் அர்த்தம், கையில் புழங்கும் பணத்தின் அளவு குறையும் என்பதே; பார்த்துப் பார்த்துச் செலவு செய்வோம். மனரீதியாக ஒருவித நிதி நெருக்கடிக்குள் போய்விடலாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ-மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை,சென்னை – 600014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph:98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|