பதிவு செய்த நாள்
10 ஏப்2022
22:18
என் பெயரில் உள்ள இரு அசையா சொத்துக்களை விற்று, அதன் வாயிலாக வரும் தொகையை, என் மகன் வீடு வாங்குவதற்கு கொடுக்க விரும்புகிறேன். இதற்கு நான் ஏதேனும் வரி செலுத்த வேண்டுமா?
ஏ.ஜி.பிரசாத், சென்னை – 95.
நீங்கள் உங்கள் மகனுக்கு பணத்தை கொடுப்பதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டாம். ஆனால், அசையா சொத்துகளை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் தொகைக்கு, குறுகிய கால அல்லது, நீண்ட கால ஆதாய வரி செலுத்த வேண்டும்.
நீங்கள் இரண்டு சொத்துகளை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளீர்கள். இரண்டுக்கும் தனித்தனியே ‘இண்டக்சேஷன்’ கணக்கிட்டு, ஆதாய வரி வருகிறதா என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.நல்ல ஆடிட்டர் ஒருவரை பாருங்கள். அவர் உங்களுக்கு ஆதாய வரிக்கான கணக்கை போட்டுக் கொடுப்பார். அதன் பின்னர், பணத்தை உங்கள் மகனுக்கு மாற்றலாம். அத்தொகை நீங்கள் அவர்களுக்கு வழங்கும் ‘பரிசு’ என்றே கணக்கில் கொள்ளப்படும்.
கடந்த 1992ல் புற்றீசல் போல் வந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, ஏமாந்தவன் நான். இம்மோசடிகள் குறித்து விசாரிக்க, தனி நீதிபதி தலைமையில், தனி நீதிமன்றம் அமைக்கப் பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சொல்ல முடியுமா?
சு.இரவிந்திரன், மாதவரம்.
ஒவ்வொரு நிதி நிறுவனத்துக்கும் தனித் தனியே, சொத்துகளை விற்பனை செய்து, பணத்தை முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் ‘லிக்விடேட்டர்கள்’ நியமிக்கப்பட்டனர். விற்பனை ஆன சொத்துகளில் இருந்து, சொற்ப தொகை பங்கிட்டும் தரப்பட்டது. ஒரு சில நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள், விதவிதமான வழிகளில் வருகின்றனர். மக்களும் அவர்களிடம் ஏமாற தயாராக இருக்கின்றனர். குறைந்த காலத்தில், அதிக வட்டி வேண்டும்; தங்களுடைய சேமிப்புகள் சட்டென்று தங்க முட்டையிடும் வாத்தாக மாறிவிட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். இரண்டுமே சாத்தியமில்லை.
நிதானமான தொடர் சேமிப்பு, கூட்டு வட்டியின் வாயிலாக முதலீடு பன்மடங்கு பெருகுவதற்கான ‘பவர் ஆப் காம்பவுண்டிங்’ உத்தி ஆகியவையே, லாபமடைய ஒரே வழி. குறுக்கு வழிகள் எதுவும் உதவாது.
நான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். மற்றபடி வேறு தொழில் எதுவும் செய்யவில்லை. என் போன்றோருக்கு வங்கியில், நிலம் வாங்குவதற்கு கடன் கிடைக்குமா?
கு.கணேசன், விருதுநகர்.
மிகவும் கஷ்டம். சுயதொழில் பிரிவினர் என்ற முகாந்திரத்தில் நீங்கள் மனைக் கடன் கோரலாம். ஆனால், பங்கு வர்த்தகர் என்பதால், நிலையான, தொடர்ச்சியான வருவாய் இருக்க வாய்ப்பில்லை. அது வங்கி மேலாளர்களை யோசிக்க வைக்கும்.உங்களது கடந்த மூன்றாண்டுகளுக்கான வருமான வரிச் சான்றிதழ் உதவலாம். ஆனால், நிச்சயமில்லை. நீங்கள் சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ வைத்துள்ள வங்கியை அணுகி கேட்டுப் பாருங்கள். உங்கள் ‘கிரெடிட் ஹிஸ்டரி’யைப் பார்த்துவிட்டு, அவர்கள் ஒருவேளை கடன் கொடுக்க முன்வரலாம்.
நான் 5 ஆண்டுகளுக்கு முன், ‘பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவனத்தில், வீட்டுக்கடன் வாங்கி, இதுவரை நிலுவை இல்லாமல் கட்டி வருகிறேன். தற்போது ப்ரீபேமென்ட் ஆக 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் ரூபாய் கட்ட சென்றால், 5 மடங்கு இ.எம்.ஐ., மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள். என்ன செய்வது?
பா.நாராயணன், கோவை.
வங்கியிடம் நீங்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த வீட்டுக்கடன் பத்திரத்தை ஒருமுறை படித்துவிடவும். அதில், இதுபோன்ற விதி எங்கேனும் சிறு எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும். இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். கடனுக்கான முன்பணம் சிறிதளவாக இருந்தாலும், வங்கி அதை பெற்றுக்கொள்வதே சரியான அணுகுமுறை. அதனால், உங்கள் குறையை https://customerservice.pnbhousing.com/myportal/writeToUs என்ற வலைதளத்தில் புகாராக எழுதிச் சமர்ப்பியுங்கள். அல்லது nodalofficer@pnbhousing.com என்ற இ – மெயிலில் விபரம் தெரிவியுங்கள்.குறைதீர்வு அதிகாரியை 011-23736857 என்ற தொலைபேசியிலும் அழைத்துப் பேசலாம். PNB Housing Finance Ltd., 9th Floor, Antriksh Bhawan, 22 Kasturba Gandhi Marg, New Delhi – 110001 என்ற முகவரிக்கும் உங்கள் புகாரை அனுப்பி வைக்கலாம்.
ரஷ்யா– உக்ரைன் போர், இந்திய பொருளாதாரத்தை எந்த வகையில் பாதிக்கிறது?
அ.யாழினிபர்வதம், சென்னை 78.
என்ன, பேப்பரே படிக்கவில்லையா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்கிறது. சமையல் எண்ணெய் விலை அந்தரத்தில் இருக்கிறது. கே.எப்.சி., உணவகங்களில் 10 சதவீத விலை உயர்வு.பிட்சா ஹட்டில், 3 சதவீத விலை உயர்வு, கோழிக்கறி விலை 15 சதவீதம் உயர்வு என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே? எல்லாம் புதின் கட்டிக்கொண்ட புண்ணியம் தான். உக்ரைன் எங்கோ 5,235 கி.மீ., துாரத்தில் இருப்பதாக நினைக்க வேண்டாம். பணம் வைக்கும் உங்கள் பான்ட் பாக்கெட்டுக்கும் வாய்க்கும் உள்ள துாரம் தான் அது.
வங்கி ஒன்றை அணுகி, புதிய சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என்று கேட்டதற்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றனர். மூத்த குடிமக்களுக்கு, குறைந்த தொகை செலுத்தி, சேமிப்பு கணக்கு துவங்க வழிவகை உண்டா? வங்கிக்கு வங்கி தொகை வித்தியாசம் காணப்படுவது ஏன்?
வீ.மணி, போடிநாயக்கனுார்.
வழங்கும் சேவையைப் பொறுத்து, குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.காசோலை இதழ்களின் எண்ணிக்கை துவங்கி, ஒரு மாதத்தில் எத்தனை முறை ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கலாம் என்பது வரை, ஒவ்வொரு சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இருப்புத் தொகை முடிவு செய்யப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி வேறுபடவே செய்யும்.
பிரதம மந்திரியின் ‘ஜன்தன் யோஜனா’ என்ற திட்டம் அனைத்து வங்கிகளிலும் வழங்கப் படுகிறது. அதில் இருப்புத் தொகை ஒன்றுமே வைக்க வேண்டாம். ஆனால், அதற்கான ஒருசில வரையறைகளும், எல்லைகளும் உள்ளன. உங்களுடைய தேவையைப் பொறுத்து, நீங்கள் வங்கிக் கணக்கை துவங்கலாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|