பதிவு செய்த நாள்
16 மார்2011
01:33
கொச்சி:சென்ற வாரம் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட கடும்நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், அந்நாடு மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள பல மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. மேலும், சீனா நாட்டில், சென்ற பிப்ரவரி மாதத்தில், வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் கார்கள் விற்பனை சரிவடைந்துள் ளது. இதனால், சீனாவிலும் ரப்பருக்கான தேவை குறைந்து போயுள்ளது. இதுபோன்ற காரணங்களால், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில், இயற்கை ரப்பரின் விலை மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற வெள்ளிக் கிழமையன்று, கொச்சி, நடப்பு சந்தையில், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை 201 ரூபாயாக இருந்தது. திங்கள் கிழமையன்று இதன் விலை, 185 ரூபாயாக மிகவும் குறைந்து போனது. சென்ற மாதம், கொச்சி நடப்பு சந்தையில், ஒரு கிலோ ரப்பர் 240 ரூபாய் என்ற அளவில் மிகவும் அதிகரித் திருந்தது.இதுகுறித்து கொச்சியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், 'ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. உலகளவில், இயற்கை ரப்பர் பயன்பாட்டில், ஜப்பானின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும். அங்கு, தேவை குறைந்துள்ளதையடுத்து, இதன் விலை சரிவடையத் தொடங்கியுள் ளது' என்று தெரிவித்தார்.நடப்பு சந்தைகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளின் முன்பேர வர்த்தக சந்தைகளிலும், இதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டின், டோக்கியோ கமாடிட்டி எக்ஸ்சேஜ்'ல், மார்ச் மாத வினியோகத்திற்கான, ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை சென்ற வெள்ளி கிழமையன்று 446 'யென்' என்ற விலையில் இருந்தது. இது, திங்கள் கிழமையன்று நடைபெற்ற, முன்பேர வர்த்தகத்தில், 430 'யென்' என்ற விலையிலும், வர்த்தகம் முடியும் போது, இதன் விலை மேலும் சரிவடைந்து 405 'யென்' என்ற விலையிலும், மிகவும் குறைந்து காணப்பட்டது. இச்சூழ்நிலையில், ஜப்பான் நாட்டில், உள்ள அணு உலைகள் வெடிக்கும் என்ற செய்தி வெளியானதை அடுத்து, இயற்கை ரப்பரின் விலை மேலும் சரிந்தது. ஜப்பானைச் சேர்ந்த, ஹீனோ மோட்டார்ஸ் நிறுவனம், வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. நிசான் நிறுவனம், அதன் 2,300 புதிய வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்றும், அதன் நான்கு தொழிற் சாலைகள் ஓரளவிற்கு சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள் ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில், டோக்கியோ முன்பேர வர்த்தக சந்தையில், ஆகஸ்டு மாத விற்பனைக்கான ஒரு கிலோ ரப்பரின் விலை, 4.5 சதவீதம் அல்லது 17.9 'யென்' குறைந்து 383.50 'யென்'னாக மிகவும் சரிவ டைந்தது.இதேபோன்று, இதர நாடுகளின், முன்பேர வர்த்தக சந்தைகளிலும், இதன் விலை குறைந்திருந்தது. பாங்காக் முன்பேர வர்த்தக சந்தையில், இதன் விலை ரூபாய் மதிப்பில், சென்ற வெள்ளிக்கிழமையன்று ஒரு கிலோ 265 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, திங்கள் கிழமையன்று 223 ரூபாயாக சரிவடைந்தது.சீனாவில், சென்ற பிப்ரவரி மாதத்தில், கார்கள் விற்பனை மிகவும் குறைந்திருந்தது. இனி வரும் மாதங்களிலும், அந் நாட்டின் வாகனங்கள் விற்பனை குறையக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், குறுகிய கால அடிப்படையில், சீனாவில் ரப்பருக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. சீனாவில், அடுத்த ஒரு சில தினங்களுக்கு, உள்நாட்டு பண்டிகைகளை முன்னிட்டு, தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை, ஜனவரி மாதத்தை விட, 33 சதவீதம் சரிவடைந்து 12 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்களாக, குறைந்திருந்தது. இதே மாதங்களில், பயணிகள் கார்கள் விற்பனையும் 37 சதவீதம் வீழ்ச்சி கண்டு 9 லட்சத்து 67 ஆயிரத்து 200 ஆக குறைந்து போனது.அண்மைகால, ரப்பர் விலை உயர்விற்கு, சீனாவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நாட்டில் உள்ள, பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதிகளவு ரப்பரை வாங்கி கையிருப்பில் வைத்தன. இச்சூழ்நிலையில், சீனாவில் மோட்டார் வாகன விற்பனை குறைந்து போயுள்ளதை அடுத்து, உலகளவில், இயற்கை ரப்பரின் விலை, மேலும் குறையும் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, உள்நாட்டில் டயர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறியதாவது: சர்வதேச அளவில், நிலைமைகள் சரியில்லாததால், இயற்கை ரப்பர் விலை குறையத் தொடங்கியுள்ளது. இது, தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு, நீடிக்கும் என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில், டயர்களின் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை 240 ரூபாயாக மிகவும் அதிகரித்து இருந்தது. அப்போது, இந்த விலை உயர்வு முழுவதையும், பயனீட்டாளர்கள் மீது, நாங்கள் சுமத்தவில்லை. இயற்கை ரப்பரின் விலை மிகவும் உயர்ந்ததால், டயர் தயாரிப்பு நிறுவனங்களின், லாப வரம்பு மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, தற்போதைய விலை குறைவை வைத்து, உடனடியாக முடிவு எதுவும் எடுக்க முடியாது' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|