பதிவு செய்த நாள்
27 மார்2011
04:07
திருப்பூர்:மத்திய அரசு விதித்துள்ள, கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை, சனிக்கிழமை துவக்கின. இதனால், உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வருவாய் இழப்பு என, தினமும் 22 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.உள்நாட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படும்,'பிராண்டட்' பனியன் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளுக்கு, 10 சதவீதமத்திய கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.நூலிழை விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், மத்திய அரசின் வரி விதிப்பால் கூடுதல் சுமை உருவாகியுள்ளது.'பிராசசிங்' மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிர்வாக நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளன. எனவே, வரி விலக்கு அளிக்கக்கோரி உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.இப்பிரச்னையை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், கடந்த 4ம் தேதியும், 15 மற்றும் 16ம் தேதிகளிலும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அதன் பின்பும், மத்திய அரசு இறங்கி வராததால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவக்கப்பட்டது. திருப்பூரில் 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 'சைமா' தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:வரி விதிப்பை திரும்பப் பெற அரசு முயற்சிக்காததால், நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியுள்ளது. திருப்பூர் சுற்றுப் பகுதியில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், தினமும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பனியன் உற்பத்தி பாதிக்கப்படும்.ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால், தினமும் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்கால நலன் கருதி, மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|