பதிவு செய்த நாள்
30 மார்2011
02:52
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய் கிழமையன்றும் நன்கு இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்கள் மீண்டும், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருவதால், தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக, பங்கு வியாபாரம் காளையின் ஆதிக்கத்தில் உள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தது.செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.ஹீரோ ஹோண்டா குழுமத்தில், 4,500 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளும் வகையில், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் பங்கின் விலை, செவ்வாய்க் கிழமை அன்று 3.02 சதவீதம் உயர்ந்து, 1,546.35 ரூபாய்க்கு கைமாறியது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 177.66 புள்ளிகள் அதிகரித்து, 19,120.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்கத்தின் இடையே அதிகபட்சமாக 19,226.21 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,944.82 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 49.10 புள்ளிகள் உயர்ந்து, 5,736.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,770.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,680.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|