பதிவு செய்த நாள்
11 ஏப்2011
00:12
- ஏ.கே.விஜய்தேவ் - அடிப்படை கட்டமைப்பு பணிகள், மிகப் பெரிய அளவிலான கட்டட வேலைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு, 'எர்த் மூவர்ஸ்' எனப்படும் கட்டுமான வாகன இயந்திரங்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது.சாலைகள் அமைக்கவும், கட்டடங்களைத் தகர்க்கவும், மணல் அள்ளவும் இத்தகைய வாகன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கால்வாசி தோண்டுவது, ஆறு, ஏரி, குளங்களை தூர் வாருவது, தரைக்கடியில் கேபிள்களை பதிப்பது, கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தி வேறிடத்தில் கொட்டுவது உள்ளிட்ட எண்ணிலடங்கா பணிகளுக்கும் கட்டுமான இயந்திரங்கள் அத்தியாவசியமாக உள்ளன. குறிப்பாக, போதிய அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்காத தற்போதைய சூழலில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்யக்கூடிய வேலைகளை, இதுபோன்ற வாகன இயந்திரங்கள், குறைந்த நேரத்தில், மிகவும் எளிதாக செய்து விடுகின்றன. இவ்வகை கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் ஜே.சி.பீ., நிறுவனம், உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கு ஏதாவது ஓரிடத்தில் ஜே.சி.பீ., இயந்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். குளிர் பிரதேசங்களில் பாறைகளைப் பிளந்து பாதை அமைக்கவும், கரடு முரடான மலைப் பகுதிகளைக் குடைந்து குகை வழிகளை உண்டாக்கவும் ஜே.சி.பீ., கட்டுமான இயந்திரங்கள் பயன்படுகின்றன. இனி இந்நிறுவனத்தின் தோற்றம், செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்... ஜே.சி.பீ. வரலாறு: ஜே.சி.பீ. நிறுவனத்தின் நிறுவனர் 'ஜோசப் சிரில் பம்போர்டு'. இவருடைய பெயரின் ”ருக்கம்தான் ஜே.சி.பீ. இவர், இங்கிலாந்தில் ஸ்டப்போர்டுஷையர் மாநிலத்தில் உள்ள உட்டாக்சிடர் என்ற இடத்தில், 1916ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம், வேளாண் துறைக்கான பொறியியல் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆனால், அதில் அக்கறை காட்டாத ஜோசப், இங்கிலிஷ் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு வெல்டிங் சாதனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர், ஸ்டப்போர்டு என்ற இடத்தில், 10 அடிக்கு, 15 அடி கொண்ட கேரேஜை வாடகைக்கு எடுத்து, அங்கு பண்ணைத் துறைக்கான டிரெய்லரை உருவாக்கினார். உருக்கு கழிவுகள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பழுதான ஜீப் வாகன அச்”களைக் கொண்டு, இவர் தயாரித்த முதல் டிரெய்லர், இவருக்கு லாபத்தை அளித்தது. அது முதல் இவருக்கு ஏறுமுகம் தான். ஜே.சி.பம்போர்டு எக்ஸ்கவேட்டர்ஸ் என்ற இவரது நிறுவனம், படிப்படியாக உயர்ந்து, இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.உலகில், கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மூன்று நிறுவனங்களில் ஒன்றாக, ஜே.சி.பீ., விளங்குகிறது. இந்நிறுவனம்,'பேக்ஹோ லோடர்' எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கான இயந்திர தயாரிப்பில் உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, இந்தியா உள்பட 150 நாடுகளில் 18 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 300 வகையான ஜே.சி.பீ., வாகன இயந்திரங்கள், டீசல் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனத்தின் டீசல்மேக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்ட கார், மணிக்கு 563 கி.மீ., சென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில், இந்நிறுவனத்தில் 8,000த் திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஜே.சி.பீ. இந்தியா: ஜே.சி.பம்போர்டு எக்ஸ்கவேட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஜே.சி.பீ. இந்தியா. 1979ம் ஆண்டு இந்திய நிறுவனத்தின் கூட்டுடன் செயல்படத் தொடங்கியது. கடந்த 2003ம் ஆண்டு, இதன் நூறு சதவீத பங்குகளை, இங்கிலாந்தின் தாய் நிறுவனம் வாங்கி, வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. அரியானா மாநிலம் பலாப்கரில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில், பேக்ஹோ லோடர்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலை, நாளொன்றுக்கு ஒரு 'ஷிப்டில்' (8 மணி நேரம்) 100 இயந்திரங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதுதவிர, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், இரு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உபகரணங்கள், எக்ஸ்கவேட்டர்கள், வீல் லோடிங் ஷவல்கள் மற்றும் வைப்ரேட்டரி கம்பாக்டர்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், இங்கு தொழில்நுட்ப பயிற்சி மையம், இயந்திர வடிவமைப்பு மையம் ஆகியவையும் இயங்கி வருகின்றன.ஜே.சி.பீ., இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக, விபின் சோந்தி செயல்பட்டு வருகிறார். ஐ.ஐ.டி. - டில்லி, ஐ.ஐ.எம். - ஆமதாபாத் ஆகியவற்றில் பட்டம் பயின்ற இவர், ஹோண்டா பவர் எக்யூப்மென்ட், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். இந்திய தொழிலக கூட்டமைப்பு, இவருக்கு 2000ம் ஆண்டிற்கான இளம் மேலாளர் விருதை வழங்கி கவுரவித்தது. இவர், ஜே.சி.பீ., இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து, தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி : இந்திய கட்டுமான இயந்திர சந்தையில் ஜே.சி.பீ.,யின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது?அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டுமான இயந்திரங்கள், வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை ஜே.சி.பீ. தயாரித்து வருகிறது. பேக்ஹோ லோடர், எக்ஸ்கவேட்டர், வீல் லோடர், டெலி ஹாண்ட்லர், வைப்ரோமேக்ஸ், லிப்ட்டால், ரோபோட் ஸ்கிட் உட்பட பல்வேறு இயந்திரங்களை தயாரிக்கிறோம். இந்தியாவில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான இயந்திரங்களை விற்பனை செய்துள்ளோம். பலாப்கர் தொழிற்சாலையில் இவ்வாண்டு, 40 ஆயிரம் இயந்திரங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது தவிர, வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, கட்டுமான இயந்திரங்களில் பொருத்தக்கூடிய சாதனங்களையும் தயாரித்து வழங்கி வருகிறோம். குழி தோண்டுவது, பொருள்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நூற்றுக்கு மேற்பட்ட இணைப்பு சாதனங்களை உருவாக்குகிறோம். இந்தியாவில் கட்டுமான இயந்திரங்களுக்கான தேவை எந்த அளவிற்கு உள்ளது? 12வது ஐந்தாண்டு திட்டத்தில், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வசதி, மின்சார உற்பத்தி, தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்ட பல துறைகளில் பணிவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் நெடுஞ்சாலைகள், புதிய வழித்தடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கான தேவையும் பெருகும். இதனால், எங்களின் வர்த்தக வாய்ப்பும் அதிகரிக்கும். ஜே.சி.பீ. ஆண்டுக்கு 15-20 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 21 ஆயிரம் இயந்திரங்களை விற்பனை செய்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என நம்புகிறோம். வளர்ச்சிக்கு ஏற்ப போட்டியும் அதிகரித்து வருகிறதே? உண்மை தான். எந்த துறையில் தான் போட்டி இல்லை... யதார்த்தமாக சொல்லப் போனால், போட்டி வரவேற்கத்தக்கது தான். அது, ஒரு நிறுவனத்தின் ஆற்றலையும், உயர் திறனையும் வெளிப்படுத்த உதவுகிறது. கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜே.சி.பீ. நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகளவில் கிடைத்துவரும் வரவேற்பில் இருந்தே, இதைத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து புதிய உத்திகளை பயன்படுத்தி, இயந்திரங்களை வடிவமைத்து வருவதால், மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள், எங்களை நாடி வருகின்றனர். அண்மையில் நாங்கள் எக்கோ மேக்ஸ் என்ற அதிநவீன தொழில்நுட்பத்திலான டீசல் இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளோம். நான்காண்டு உழைப்பில், 135 கோடி ரூபாய் முதலீட்டில், இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. 75 சதவீத உள்நாட்டுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், நிறுவனத்தின் பேக்ஹோ லோடர் உள்ளிட்ட இயந்திரங்களில் பொருத்தப்படும். அதிக ஆற்றல், எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்ட அம்சங்களால் இந்த இன்ஜின், டீசல் மேக்ஸ் இன்ஜின் போல் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும். வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் திருப்தி. உங்கள் வாகன இயந்திரங்களுக்கு, எல்லா இடங்களிலும் உதிரிபாகங்கள் கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறதே? அப்படிச் சொல்ல முடியாது. விற்பனை, அதற்கு பிந்தைய சேவை, பாராமரிப்பு என அனைத்து நிலைகளிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம். இயந்திரங்களை வாங்குவதற்கு வங்கிகள், நிதிநிறுவனங்கள் மூலம் கடனுதவி பெற்றுத் தருகிறோம். இதற்காக, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். நாடு முழுவதும் 53 முகவர்கள் உள்ளனர். 370 விற்பனை மையங்கள் வாயிலாக, இயந்திரங்களை விற்பனை செய்து வருகிறோம். உதிரிபாகங்கள் விற்பனை, 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம், பராமரிப்பு பணிகளுக்கு, பயிற்சி பெற்ற பணியாளர்கள் என, அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்பாடுகளை கொண்டுள்ளோம். தமிழகத்தில் எத்தனை விற்பனை மையங்கள் உள்ளன? சந்தைப் பங்களிப்பு எவ்வளவு? தமிழகத்தில் எங்கள் முகவர்களாக, சென்னையில் டி.ஆர்.ஆர். விழுப்புரத்தில் டைனமிக், மதுரையில் ஜெயராஜ் மற்றும் சேலத்தில் லெக்சல்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம், 39 விற்பனை மையங்களில் இயந்திரங்கள், உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவை அடங்கிய தென்பிராந்தியத்தில் எங்களின் சந்தைப் பங்களிப்பு, 25 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஜே.சி.பீ., இந்தியாவின் எதிர்கால திட்டம் என்ன?புதுமை, வலிமை, உயரிய ஆற்றல் இவற்றின் அடிப்படையில் தான் எங்கள் வாகன இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுதான் எங்கள் வளர்ச்சியின் தாரக மந்திரம். அதைப் பின்பற்றி மேலும் பல புதிய இயந்திரங்கள், இன்ஜின்களை உருவாக்கி அடிப்படை கட்டமைப்புத் துறையின் சீரிய வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே, எங்கள் எதிர்கால திட்டம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|