பதிவு செய்த நாள்
27 ஏப்2011
02:17
கடந்த ஓர் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்ற 2010ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் நடப்பு 2011ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி வரையிலுமாக, 10 கிராம் தங்கத்தின் விலை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை, 16,650 ஆக இருந்தது. இது, நடப்பு ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியன்று, 22 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலை, 149 சதவீதம் அல்லது 2.5 மடங்கு அதிகரித்து, அதாவது 28 ஆயிரத்து 90 என்ற விலையிலிருந்து, 70 ஆயிரம் ரூபாயாக மிகவும் அதிகரித்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும், இந்த மதிப்பு மிகு உலோகங்களுக்கான தேவை மற்றும் வரத்திற்கும் உள்ள இடைவெளியில் அதிக மாற்றம் இல்லையென்றாலும் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் ஈடுபட்டு வரும் பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த உலோகங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்காது என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியும், பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக டாலரின் மதிப்பு குறைந்து வருவதும் தான், இவற்றின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணங்கள் என, மும்பை தங்கம் வெள்ளி சந்தையின் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.அமெரிக்க டாலரின் மதிப்பு, நிலைக்கு வந்து, மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டால், தங்கத்தின் விலை, 10-15 சதவீத அளவிற்கும், வெள்ளியின் விலை 35-30 சதவீத அளவிற்கும் குறைய வாய்ப் புள்ளது.எனவே, முதலீட்டாளர்கள் இவற்றின் விலை, குறையும் நிலையில், இந்த உலோகங்களில் முதலீடு மேற்கொள்வதே ஆதாயம் அளிப்பதாக இருக்கும்.மற்ற உலோகங்களை போல் அல்லாமல் ஆபரணங்களுக்கு மட்டுமின்றி, தொழில் துறைகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டில், வெள்ளியின் விலை 2.5 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த 1980 ம் ஆண்டில், சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) வெள்ளியின் விலை, 51 டாலராக இருந்தது. இது, தற்போது 46 டாலர் என்ற அளவில் தான் உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இதன் விலை, சர்வதேச சந்தையில், புதிய அளவை எட்டக்கூடும் என்ற மதிப்பீடும் உள்ளது.மேலும், கடந்த ஓர் ஆண்டு காலத்தில், வெள்ளியில் மேற்கொள்ளப் படும் முதலீடு, தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை விட 10 மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளி உலோகத்தின் மீது, அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடும், இதன் விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில், கடந்த 2009ம் ஆண்டு இறுதியில், ஈ.டி.எப்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், பங்கு சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதற்கான தங்க முதலீட்டு திட்டங்களில், 9,400 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம், வெள்ளி, முதலீட்டு திட்டங்களில், 1,900 கோடி டாலர் என்ற அளவில்தான் முதலீடுமேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 18 மாதங்களில், தங்க முதலீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 25 சதவீதம் குறைந்து 7,000 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. ஆனால், வெள்ளி முதலீட்டு திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, கடந்த 18 மாத காலத்தில், 40 சதவீதம் அதி கரித்து 2,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது என சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியின் விலை உயர்விற்கு எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லை. சர்வதேச அளவில், பங்கு சந்தைகளில் வர்த்தகம் நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவும், இந்த உலோகங்களின் விலை உயர்விற்கு காரணமாக கருதப் படுகிறது.கடந்த 2008ம் ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 2009ம் ஆண்டில் நம் நாட்டின் தங்க இறக்குமதி சற்று குறைந்திருந்தது. ஆனால், 2010ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, நாட்டின் தங்க இறக்குமதி மீண்டும் உயரத் தொடங் கியது. குறிப்பாக, கடந்த 2009ம் ஆண்டில், இந்தியாவின் தங்க இறக்குமதி 559 டன்னாக இருந்தது. இது, 2010ம் ஆண்டில் 700 டன்னாக அதிகரித்தது. நடப்பு 2011ம் ஆண்டில், நாட்டின் தங்க இறக்குமதி 950 டன்னாகவும், வெள்ளி இறக்குமதி 4,000 டன்னாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில், தங்க ஆபரணங்களுக்கான தேவைப் பாடு, கடந்த ஓர் ஆண்டில், 70 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களை விட, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், தங்க ஆபரணங்கள் வாங்குவது 60-65 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை நிறுவனங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் கிளைகளை தொடங்கி வருகின்றன. இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தவிர தங்க பரஸ்பர நிதி திட்டங்களிலும், முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.தங்க ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்ய 'டிமேட்' கணக்கு தேவை. ஆனால், ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள தங்க முதலீட்டு திட்டத்தில் சேர்வதற்கு, 'டிமேட்' கணக்கு தேவையில்லை. எனினும், நிர்வாக செலவாக, மொத்த தொகையில் 1.5 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.உலகளவில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தான் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். அட்சய திருதியை: நடப்பு ஆண்டு அட்சய திருதியை, மே மாதம் 6ம் தேதி வருகிறது. பொதுவாக, அட்சய திருதியையின் போது, தென் மாநிலங்களில் உள்ள மக்கள், தங்கம் வெள்ளி உள்ளிட்ட மதிப்பு மிகு உலோகங்கள் மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல தங்க ஆபரண விற்பனையாளர்கள், இப்போதே தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை, அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர். இதுவும், இந்த உலோகங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சென்னையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.அட்சய திருதியை முன்னிட்டு, தங்கம் விலை மேலும் உயர கூடும் என்ற நிலைப்பாட்டால், பல நகைக்கடைகள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தற்போதைய விலையிலேயே தங்க நகைகளை முன்பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக, தற்போதைய விலையிலேயே, அட்சய திருதியை அன்று, தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். - திருமை. பா. ஸ்ரீதரன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|