பதிவு செய்த நாள்
05 மே2011
05:07
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து எட்டாவது வர்த்தக தினமாக, புதன்கிழமையன்றும் மிகவும் மந்தமாக இருந்தது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நிறுவனங்களின் வட்டிச் செலவினம் அதிகரித்து, அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்ற மதிப்பீட்டால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்திருந்தது.ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் விலக்கி கொள்ளப்படலாம் என்ற செய்தியால், மோட்டார் வாகனத் துறை நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது. இதுதவிர, உலோகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, நுகர்பொருள்கள், வங்கி, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவைப்பாடு காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 65.33 புள்ளிகள் சரிவடைந்து, 18,469.36 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,604.36 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,339.53 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 28.10 புள்ளிகள் குறைந்து, 5,537.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,578.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,503 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|