பதிவு செய்த நாள்
07 மே2011
00:17
சென்னை: சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,500 கோடி ரூபாயில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து, இக்குழுமத்தின் செயல் தலைவர் ஏ. வெள்ளையன் கூறியதாவது: குழுமத்தைச்சேர்ந்த கோரமண்டல் இன்டர்நேஷனல், டியூப் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் கார்போரண்டம் யூனிவர்சல் ஆகிய மூன்று நிறுவனங்களில், அதிகளவில் முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில்,குழுமத்தின் விற்று முதல், 25 சதவீதம் அதிகரித்து, 17 ஆயிரத்து 51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டில் 13 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் நிறுவனத்தின், வரிக்கு முந்தைய லாபம், 20 சதவீதம் அதிகரித்து, 2,247 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1,879 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், இக்குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம், 20 சதவீதம் அதிகரித்து , 1,657 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, கடந்த ஓராண்டு காலத்தில், 11 ஆயிரத்து 193 கோடி ரூபாயிலிருந்து, 19 ஆயிரத்து 194 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வரும் 2013-14ம் நிதியாண்டிற்குள் குழுமத்தின் விற்று முதலை 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் 25-30 சதவீதம் வரை, வளர்ச்சி காண முனைந்துள்ளோம்.குழுமத்தின் துணை நிறுவனமான, சோழ மண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு பைனான்ஸ் வாயிலாக, தங்க நகைக் கடன் வர்த்தகத்தை தொடங்க உள்ளோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் தங்க நகை கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|