பதிவு செய்த நாள்
13 மே2011
00:22
புதுடில்லி: சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், 7.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2009 -10ம் நிதியாண்டில், இந்த வளர்ச்சி விகிதம், 10.5 சதவீதம் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது. வட்டி செலவினம் அதிகரிப்பு மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வால், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து போனதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், 7.3 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. சென்ற மார்ச் மாதத்தில், இந்த வளர்ச்சி விகிதம், 4 சதவீதம் என்றளவில் தான் இருக்கும் என, சந்தையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது, இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் 3.6 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், 15.5 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மார்ச் மாதத்தில், பொறியியல் துறையின் உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, இம்மாதத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி உயர்ந்திருந்தது. என்றாலும், வட்டி செலவினம் அதிகரிப்பால், இத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து போயுள்ளது. மார்ச் மாதத்தில் பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி 12.9 சதவீதமாக இருந்தது. இது, மதிப்பீடுகளை விட அதிகமாகும். இருப்பினும், இதற்கு முந்தைய மூன்று மாதங்களில், இத்துறை எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. அதாவது, சென்ற பிப்ரவரி மாதத்தில், இத்துறை 18.2 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. இது, ஜனவரி மாதத்தில், 18.8 சதவீதம் என்றளவிலும், டிசம்பர் மாதத்தில் 9 சதவீதம் என்றளவிலும், எதிர்மறை வளர்ச்சியை பெற்றிருந்தது. கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், பொறியியல் துறையின் வளர்ச்சி விகிதம், 36 சதவீதம் என்றளவில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதுகுறித்து பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாக, நுகர்வோர் சாதனங்கள் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. அதே சமயம், பொறியியல் துறையின் வளர்ச்சி பின்னடைவு கண்டிருந்தது. இதன் காரணமாகவே, ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி குறித்து, சரியாக மதிப்பிட முடியாமல் இருந்தது. சென்ற மார்ச் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்மாதத்தில் இதன் வளர்ச்சி மேம்பட்டுள்ளது' என்றார்.தயாரிப்பு துறையின் வளர்ச்சி, சென்ற மார்ச் மாதத்தில், 7.9 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி விகிதம், 16.4 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்திருந்தது. சுரங்கத் துறையின் வளர்ச்சி, சென்ற மார்ச் மாதத்தில், 0.2 சதவீதம் என்றளவில் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 12.3 சதவீதமாக இருந்தது. மின் உற்பத்தி துறையின் வளர்ச்சி, 7.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 8.3 சதவீதமாக இருந்தது. அடிப்படை பொருள்களின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற மார்ச் மாதத்தில், 4.3 சதவீதமாக, மிகவும் குறைந்துள்ளது. இது, சென்றாண்டு இதே மாதத்தில், 10.2 சதவீதமாக இருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 80 சதவீதம் என்றளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்ற வாரம், ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வங்கிகளுக்கான, 'ரெப்போரேட்' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போரேட்' விகிதங்களை தலா 0.50 சதவீதம் உயர்த்தியது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இது, பொறியியல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளின் உற்பத்தி வளர்ச்சியை மேலும் பாதிக்கக்கூடும் என, ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.இடைநிலை பொருள்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம், சென்ற மார்ச் மாதத்தில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்றாண்டு இதே மாதத்தில், 13.5 சதவீதமாக இருந்தது. இதே மாதங்களில், நுகர்பொருள் துறையின் வளர்ச்சியும், 9.3 சதவீதத்திலிருந்து, 7.7 சதவீதமாக குறைந்துள்ளது.தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சப்பாடும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|