பதிவு செய்த நாள்
22 மே2011
02:08
பங்கு வர்த்தகம் இன்னும் சரியான தடத்திற்கு வரவில்லை. தொடர்ந்து சரிந்து கொண்டே உள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்று விடுமோ என்ற அச்சம் பலருக்கு இருந்தது. இது, இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவடைவதற்கு பல காரணங்கள் உள்ளன.இருப்பினும் வெள்ளிக்கிழமையன்று, 'சென்செக்ஸ்' 185 புள்ளிகள் அதிகரித்து, 18,326 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 58 புள்ளிகள் உயர்ந்து, 5,486 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஆனால், ஒட்டுமொத்த அளவில், 'சென்செக்ஸ்' சென்ற வாரத்தில், மொத்தம் 205 புள்ளிகளும், 'நிப்டி' 58 புள்ளிகளும் சரிவடைந்திருந்தன.குறைந்ததற்கான காரணங்கள்: சென்ற வாரம் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் தவிர, மூன்று வர்த்தக தினங்களில், நாட்டின் பங்கு வியாபாரம் மிகவும் மோசமாகவே இருந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் நிதிநிலை முடிவுகள், சந்தைக்கு அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இவ்வங்கியின் லாபம், முந்தைய காலாண்டை விட, 99 சதவீதம் குறைந்து காணப்பட்டது. பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வுதிய சலுகைகள், கடன் இடர்பாட்டிற்கான ஒதுக்கீடு போன்றவை தான், இவ்வங்கியின் லாப வரம்பு குறைந்ததற்கு காரணம் என, வங்கி தரப்பில் கூறப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் சரிவு நிலை: மத்திய அரசு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய, 4,299 கோடி ரூபாய் மானிய சுமையை, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் மீது இறக்கி வைத்துள்ளது. இதனால், இத்துறை நிறுவனங்களின் லாபம் சரிவடையும் என்ற நிலைப்பாட்டால், ஓ.என்.ஜி.சி. ஆயில் இந்தியா மற்றும் கெயில் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து போனது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது என்ற செய்தியால், அண்மைக்காலமாக, இதன் பங்கின் விலை உயர்ந்து வந்தது. மத்திய அரசின் மானிய சுமை பகிர்வு அறிவிப்பால், இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறைந்துள்ளதுடன், பங்கு வெளியீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உயர்வு: தொடர்ந்து சரிவடைந்து கொண்டிருந்த பங்கு வர்த்தகம், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில், சற்று ஏற்றத்தை கண்டது. இதற்கு, டாட்டா பவர் மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகிய நிறுவனங்களின், சிறப்பான நிதிநிலை முடிவுகள் தான் காரணமாக அமைந்தது.இதனால், இவ்விரு நிறுவனப் பங்குகள் தவிர, இத்துறையை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் கூடியது. மேலும், சர்வதேச அளவில், விளைபொருள்களின் விலை குறைந்ததும், பங்கு வர்த்தகத்திற்கு ஊக்கமளிப்பாக இருந்தது. இவ்வாரத்தில், பாரத ஸ்டேட் வங்கி தவிர, இதர நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தன. புதிய வெளியீடுகள்: பங்குச் சந்தையின் ஏற்பட்ட சுணக்க நிலையால், கேலக்சி சர்பாக்டென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குகள் வேண்டி போதிய அளவிற்கு விண்ணப்பங்கள் வரவில்லை. எனவே, இந்நிறுவனம், அதன் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. தொகுப்பில் இருக்க வேண்டிய பங்குகள்: பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்குகளை, உங்கள் பங்கு தொகுப்பில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பங்கின் விலையை பற்றி, தொடர்ந்து கவனித்து வருபவர்கள், இதுகுறித்து நன்கு அறிந்திருப்பர். இதன் பங்கின் விலை, அதிகளவில் ஏற்றமும் இல்லாமல், சரிவு இல்லாமல், சீரான அளவில் வளர்ந்து வருகிறது. வங்கி வட்டி விகிதத்தை விட, இதன் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரத்திலும், பங்குச் சந்தை அதிக ஏற்ற, இறக்கமின்றி இருக்கவே வாய்ப்புள்ளது. நல்ல அளவில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள நிறுவனங்களில், பங்குகளை வாங்குவதற்கு இது ஒரு நல்ல தருணமாகவே உள்ளது. - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|