பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
04:25
புதுடில்லி:நாட்டின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி, சென்ற 2010-11ம் நிதியாண்டில், மதிப்பீடுகளை விஞ்சி,6.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது,முந்தைய நிதியாண்டில், 0.4 சதவீதம் என்ற அளவில், மிகவும் குறைவாக இருந்தது.சென்ற நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உணவு தானியங்கள் உற்பத்தி, 23.59 கோடி டன்னாக உயர்ந்ததுதான். மத்திய அரசு, சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி, 5.4 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது. ஆனால், மூன்றாவது மதிப்பீட்டையும் விஞ்சி, உற்பத்தி மேம்பட்டுள்ளது. குறிப்பாக, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் உற்பத்தி, அரசின் இரண்டாவது மதிப்பீட்டை விட உயர்ந்துள்ளது.வேளாண் உற்பத்தி மட்டுமின்றி, வனம் மற்றும் மீன் வளமும் சிறப்பான அளவில் மேம்பட்டிருந்தது.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் இது குறித்து கூறுகையில், 'நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஆண்டு இருந்த அளவிற்கு இருக்காது' என்று தெரிவித்தார்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்க ளிப்பு, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 7.5 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில், 1.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது.சென்ற 2010-11ம் வேளாண் பருவத்தில் (ஜூலை - ஜூன்), உணவு தானியங்கள் உற்பத்தி, 23.59 கோடி டன்னாக இருக்கும் என, மூன்றாவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முந்தைய வேளாண் பருவத்தில், இவற்றின் உற்பத்தி, 21.81 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2008-09ம் வேளாண் பருவத்தில், மிகவும் அதிகபட்சமாக, உணவு தானியங்கள் உற்பத்தி, 23.45 கோடி டன்னாக இருந்தது. இதுவரை, இதுவே, சாதனை அளவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வேளாண் பருவத்தில், மொத்த உணவு தானியங்கள் உற்பத்தியில், கோதுமை உற்பத்தி 8.43 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 1.73 கோடி டன்னாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி 3.03 கோடி டன்னாகவும், பருத்தி உற்பத்தி 3.39 கோடி பொதிகள் (ஒரு பொதி 170 கிலோ) என்ற அளவிலும் இருந்தது.சென்ற நிதியாண்டில் மத்திய அரசு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல் வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டது. மேலும், பருவ நிலையும் சாதகமாக இருந்ததால், தானியங்கள் உற்பத்தி மதிப்பீடுகளை விஞ்சி அதிகரித்துள்ளது.அதேசமயம், 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் பல மாநிலங் களில், வறட்சி நிலை ஏற்பட்டதால், அவ்வாண்டில், தானியங்கள் உற்பத்தி, 1.60 லட்சம் டன் குறைந் திருந்தது. தற்போதைய நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்துறையின் பங்களிப்பு 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 60 சதவீதத்தினர், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளையே சார்ந்தே உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|