பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
23:52
புதுடில்லி: அஞ்சலக சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு, தற்போது, 3.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதை 4 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.பி.எப்.) ஓராண்டிற்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கான உச்சவரம்பை தற்போதைய 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும், கிசான் விகாஸ் பத்திர முதலீட்டு திட்டத்தை திரும்ப பெறவும் மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.நாட்டில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதையடுத்து வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் பல்@வறு டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அண்மையில் வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை, 4 சதவீதமாக உயர்த்தியது. இதனால், அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் மக்களின் முதலீடு குறைந்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியத்தில் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு மேற்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.நாட்டில் செயல்படும் அஞ்சலகங்களின் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இப்பரிந்துரைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அஞ்சலக சிறுசேமிப்பு திட்ட முகவர்களுக்கு வழங்கப்படும், 4 சதவீத கமிஷனை படிப்படியாக 1 சதவீதம் என்ற அளவில் குறைக்கவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அஞ்சலகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தடுக்கப்படும்.தற்போது அஞ்சல் அலுவலகங்களில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத வட்டியை, 4 சதவீதமாக அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, இப்பரிந்துரைகளை ஏற்கும் நிலையில், சிறு சேமிப்புக்கான ஆண்டு வட்டி, தற்போதைய 6.25 சதவீதத்தில் இருந்து, 6.80 சதவீதமாக உயரும். பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் ஆண்டு வட்டி, தற்போதைய 8 சதவீதத்தில் இருந்து, 8.20 சதவீதமாக அதிகரிக்கும்.வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அன்றாட வட்டி கணக்கிடப்படுகிறது. இதேபோல், அஞ்சலக சேமிப்பிற்கும் அன்றாட அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டால் அது, முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிக்கும்.தபால் அலுவலகத்தில் ஐந்தாண்டு காலத்திற்கு, தொடர் வைப்பு சேமிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு பிறகே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதை ஓராண்டாக குறைக்கவும், அவ்வாறு ஓராண்டிற்குள் தொகை எடுக்கப்பட்டால், அதற்கு அபராதமாக, நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் 1 சதவீதத்தை குறைத்து வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|