பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:08
மும்பை:கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாக உள்ளது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள், நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை விட, அதிக வருவாய் அளிக்கக்கூடிய கடன்பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு நிலையால், பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலையும், மிகவும் குறைந்து போயுள்ளது. இச்சூழ்நிலையில், இந்நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை விட, கடன்பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு, மிகவும் ஆதாயம் அளிப்பதாக உள்ளதால், அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றன என, மும்பையைச் சேர்ந்த இத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.உலகளவில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விளை பொருள்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், பல நாடுகளில் பணவீக்கம், பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதனை, கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், சென்ற வாரம் வரையிலுமாக, வங்கிகளுக்கான 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' வட்டி விகிதங்களை பத்து முறை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன் மற்றும் திரட்டப்படும் டிபாசிட்டிற்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், பல அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில், கடன்பத்திரங்களில் இதுவரையிலுமாக, 14 ஆயிரத்து 969 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இவ்வாண்டில், இதுவரையிலுமாக, இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டுள்ள மொத்த முதலீட்டில், 804.20 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, சி.என்.ஐ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கி÷ஷார் ஆஸ்வால் கூறுகையில், ' உணவுப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், கடன்பத்திரங்களுக்கு அதிகளவில் வட்டி கிடைக்கின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி, அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய தலைப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உலகளவில், பல்வேறு பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில், அதிக வருவாய் அளிக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றன என, எஸ்.எம்.சி கேப்பிட்டல் ஈக்யுட்டி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜெகந்நாதம் துனுகுண்டலா தெரிவித்தார்.நடப்பு 2011ம் ஆண்டில்,சென்ற வெள்ளிக்கிழமை வரையிலுமாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 13 சதவீதம் சரிவடைந்து, 17, 871 புள்ளிகளாக குறைந்து போயுள்ளது. இந்த சரிவு நிலை, திங்கள்கிழமையும் இருந்தது. நேற்று 'சென்செக்ஸ்' மேலும், 364 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், இந்தியாவில், பொருளாதாரம் நன்கு இருந்ததுடன், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் பங்கு வர்த்தகமும் சிறப்பாக இருந்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டில், நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களிலுமாக, 10 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. இதே ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் அவற்றின் மொத்த முதலீட்டில், 7 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, கடந்த ஆண்டில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி வரையிலுமாக, 'செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்ட அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 1,718 ஆக இருந்தது. இது, நடப்பு 2011ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி வரையிலுமாக, 1,721 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், பதிவு செய்து கொண்ட அன்னிய துணை நிறுவனங்களின் கணக்கு எண்ணிக்கையும் 5,503 என்ற அளவிலிருந்து, 5,879 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|