பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:10
மும்பை:நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற வியாழக்கிழமையன்று வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.இதையடுத்து, பல முன்னணி வங்கிகள் வழங்கப்படும் கடன்கள் மற்றும் திரட்டப்படும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் உள்ளிட்ட பல வசங்கிகள் வழங்கப்படும் கடன்கள் மற்றும் திரட்டப்படும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை,மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.இது குறித்து, கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ். ராமன் கூறுகையில் 'வங்கியின் சொத்து மற்றும் கடன் நிர்வாகக் குழு கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும்.குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால், எங்கள் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக வங்கி, அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, அடிப்படை வட்டி விகிதம், 13.75 சதவீதத்திலிருந்து, 14.25 சதவீதமாகவும், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 9.50 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது' என்று தெரிவித்தார்.கார்ப்பரேஷன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராம்நாத் பிரதீப் கூறுகையில் 'வங்கி, வழங் கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, உயர்த்தாவிடில், வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு பாதிப்புக்குள்ளாகும்.எனினும், வங்கி,திரட்டும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் எண்ணமில்லை' என்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தும் என தெரிகிறது. இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா கூறுகையில், 'வங்கி, சொத்து மற்றும் கடன் நிர்வாகக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, டிபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். குறைந்த கால அடிப்படையிலான டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம்' என்று தெரிவித்தார். பொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ வங்கியின், சொத்து மற்றும் கடன் நிர்வாக குழுவின் கூட்டம் சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் வகையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு, இம்மாதம் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயம், தேனா பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் போன்ற வங்கிகள், தற்போதைய நிலையில் வட்டி விகிதங்களை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|