பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:06
மும்பை: சென்ற 2010-11ம் நிதி ஆண்டில் கார்கள் விற்பனை வாயிலான உற்பத்தி வரி வசூல் 5,001 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கும் முந்தைய 2009-10ம் நிதி ஆண்டை விட 26 சதவீதம் (3,958 கோடி ரூபாய்) அதிகமாகும்.கடந்த நிதியாண்டில், கார் உற்பத்தி மற்றும் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் கார் விற்பனை, முந்தைய நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகரித்து 20 லட்சமாக உயர்ந்திருந்தது. கார் உற்பத்தியும் 27 சதவீதம் உயர்ந்து, 24.50 லட்சமாக அதிகரித்திருந்தது.கார் விற்பனை அதிகரித்ததையடுத்து, சென்ற நிதியாண்டில், இத்துறை வாயிலான உற்பத்தி வரி வசூல் மேம்பட்டுள்ளதாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் பார்லிமென்டில் தெரிவித்தார்.2010-11ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், கார்கள் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதேசமயம், கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால், உலகின் பல்வேறு நாடுகளில், பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு 2008-09ம் நிதியாண்டில், உற்பத்தி வரியில் 4 சதவீதம் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிறிய கார்களுக்கான உற்பத்தி வரி 10 சதவீதம் என்ற அளவிலும், பெரிய கார்களுக்கான உற்பத்தி வரி 22 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.அன்னியச் செலாவணி வருவாய்: கடந்த 2010-11ம் நிதியாண்டில், கார் ஏற்றுமதி வாயிலான, அன்னியச் செலாவணி வருவாய், முந்தைய நிதியாண்டை விட, 5 சதவீதம் உயர்ந்து 15 ஆயிரத்து 276 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது, முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 14 ஆயிரத்து 482 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சுணக்க நிலையால், கார் ஏற்றுமதி சற்று குறைந்து போனது. சென்ற நிதியாண்டில், நாட்டின் கார் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 7 லட்சத்து 81 ஆயிரம் லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சென்ற நிதியாண்டில், நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி வருவாயில், கார்கள் ஏற்றுமதி வாயிலான வருவாய் 1.95 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|