பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:06
பெங்களுர்: இந்தியாவில் இருந்து, அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் முந்திரி ஏற்றுமதி, கடந்த நான்காண்டுகளில் 29.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் முந்திரிக் கொட்டை உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி குறைந்துள்ளது. உலகளவில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை, முந்திரி பயன்பாட்டில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த இடத்தை தற்போது இந்தியா பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவை விட இந்தியாவில் முந்திரி பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்தியாவில், ஆண்டுக்கு சராசரியாக 2.50 லட்சம் டன் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 1.10 லட்சம் டன் முந்திரி ஏற்றுமதியாகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் முந்திரிப் பருப்பை ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு முதல் வியட்நாம் நாடு, அதிக அளவில் முந்திரியை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. வியட்நாம், இந்தியாவை விட குறைந்த விலைக்கு முந்திரியை விற்பனை செய்து, அமெரிக்க சந்தையை கைப்பற்றிக் கொண்டது. இதுவும், அமெரிக்காவிற்கு, இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி குறைந்ததற்கு காரணமாகும்.கடந்த 2007-08ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து 42 ஆயிரத்து 694 டன் முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து, சென்ற 2010 -11ம் நிதியாண்டில், 30 ஆயிரத்து 100 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக, கடந்த 4 ஆண்டுகளில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி 29.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. அமெரிக்கா, கடந்த 2009-10ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில் இருந்து 1.17 லட்சம் டன் முந்திரியை இறக்குமதி செய்து கொண்டது. இதில் இந்தியாவின் பங்களிப்பு 30 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், அமெரிக்காவின் முந்திரி இறக்குமதி அதிகரித்து, 1.26 லட்சம் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. ஆனால், இதில் இந்தியாவின் பங்களிப்பு, 30 ஆயிரத்து 100 டன் என்ற அளவிற்கே அதிகரித்திருந்தது.அமெரிக்காவிற்கான இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி, அளவில் மட்டுமின்றி மதிப்பின் அடிப்படையிலும் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு உயர்வால், கடந்த 2007-08 ம் நிதியாண்டில் இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி வாயிலான வருவாய் 838 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருந்தது. இது, 2008-09ம் நிதியாண்டில் 975 கோடி ரூபாயாகவும், 2009-10ம் நிதியாண்டில் 806 கோடி ரூபாய் என்ற அளவிலும் இருந்தது.அமெரிக்காவிற்கான முந்திரி ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு, நடப்பு 2011-12ம் நிதியாண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இந்தியாவில் இருந்து 275 கோடி ரூபாய் மதிப்பிலான 7,000 டன் முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவைப் போல் ஆஸ்திரேலியாவிற்கான நம் நாட்டின் முந்திரி ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவின் மொத்த முந்திரி பருப்பு இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு 90 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கான முந்திரி ஏற்றுமதி குறைந்துள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள், ஜப்பான் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தை உள்ளடக்கிய 65 நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். வியட்நாம், அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்து வருவதால், இந்நாடுகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு போட்டி குறைவாகவே உள்ளது.இந்தியாவின் முந்திரிக் கொட்டை உற்பத்தி, ஆண்டுக்கு 5 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இது தவிர, 7 லட்சம் டன் முந்திரிக் கொட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் முந்திரிக் கொட்டை உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க மத்திய, மாநில அர”கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், ஆண்டுக்கு 18 லட்சம் டன் அளவிற்கு முந்திரிக் கொட்டையில் இருந்து முந்திரியை பிரித்து, பதப்படுத்தும் திறன் கொண்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளன. இத் தொழிற்சாலைகளின் முழு உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முந்திரிக் கொட்டைகள் தாராளமாக கிடைக்க அர” வழி செய்ய வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். நடப்பு நிதியாண்டில், பிரேசில்,வியட்நாம் நாடுகள் அதிக அளவில் முந்திரிக் கொட்டையை இறக்குமதி செய்து வருகின்றன. வியட்நாம், 3.25 லட்சம் டன்னும், பிரேசில் 40 ஆயிரம் டன் என்ற அளவிற்கும் முந்திரிக் கொட்டையை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் முந்திரிக் கொட்டை இறக்குமதியில் ஒரு லட்சம் டன் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் முந்திரி பதப்படுத்தும் தொழில் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சப்பாடு எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|