பதிவு செய்த நாள்
18 செப்2011
01:37
புதுடில்லி : பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீட்டின் மூலம், மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. வரும் 20ம் தேதி இப்பங்கு வெளியீடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இதன் பங்கு வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய பங்குச் சந்தை நிலையில்லாமல் அதிக ஏற்ற, இறக்கமாக உள்ளதால், பங்கு வெளியீடு மேற்கொள்வதற்கு இது உகந்த காலம் அல்ல என்று, மத்திய அரசு கருதுவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். ஓ.என்.ஜி.சி இரண்டாவது முறையாக பங்கு வெளியீடு மேற்கொள்ளும்பட்சத்தில், அந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் தற்போதைய, 74.14 சதவீதத்தில் இருந்து, 69.14 சதவீதமாக குறையும். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், சென்ற 2010 -11ம் நிதியாண்டில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால், "செபி'யின் புதிய விதிமுறைப்படி, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், சுயேட்சை இயக்குனர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், பங்குச் சந்தையின் சாதகமற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால், இரண்டாவது பங்கு வெளியீடு பல முறை தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|