பதிவு செய்த நாள்
18 செப்2011
01:38
நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகம் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், கடந்த வாரங்களில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்குவர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. இந்நிலையில், உள்நாட்டில், பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில்,ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது (அது போன்றே, வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன). இதனால், நாட்டின் பங்கு வியாபாரம், நடப்பு வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் அல்லது மிகவும் சுணக்கமாக இருக்கும் என, பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் பொய்ப்பிக்கும் வகையில் வர்த்தகம் நன்கு இருந்தது. காரணம் என்ன? நடப்பு வாரத்தில், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு, அமெரிக்க அதிபர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் முக்கிய காரணமாக இருந்தது. திங்கள்கிழமையன்று வர்த்தகத்தில், சற்று சுணக்கநிலை ஏற்பட்ட போதிலும், செவ்வாய் முதல் வெள்ளி வரையிலான நான்கு வர்த்தக தினங்களில், பங்கு வர்த்தகம் சிறப்பாக அமைந்திருந்தது. திங்கள்கிழமை முதல் வெள்ளி வரையிலான ஐந்து வர்த்தக தினங்களில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' மொத்தம் 432 புள்ளிகள் அதிகரித்து, 16,934 புள்ளிகளில் நிலை பெற்றது. இதே வர்த்தக தினங்களில், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 137 புள்ளிகள் உயர்ந்து, 5,084 புள்ளிகளில் நிலைகொண்டது. ஆக, இவ்வாரத்தில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குளின் விலை உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களும் இந்திய நிறுவனப் பங்குகளில், அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டன. நிறுவனங்களின் முன்கூட்டிய வரி: செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்று, பல நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டியவரி, கடந்த ஆண்டின் இதே காலாண்டிற்கு செலுத்தப்பட்ட வரியை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார சுணக்க நிலை, வட்டி விகிதம் அதிகரிப்பு, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.3 சதவீதமாக குறைந்துள்ளது போன்றவற்றால் நிறுவனங்கள் செலுத்தும் முன்கூட்டிய வரி, இக்காலாண்டில் குறையும் என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், இதற்கு மாறாக, முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது என்ற செய்தி பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. ரூபாயின் மதிப்பு: நடப்பு வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் சரிவடைந்து போனது. குறிப்பாக, புதனன்று ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 48.01 ரூபாயாக குறைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளின் செலாவணிகளின் மதிப்பும், அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவடைந்திருந்தது. இது, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இறக்குமதியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி தரும் நிலைப்பாடாக அமைந்தது. இருப்பினும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நிலைமையை சரி செய்யும் வகையில், அதிகளவில் டாலரை புழக்கத்தில் விடும் நடவடிக்கையில் களமிறங்கின. இதையடுத்து, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சற்று உயர்ந்தது. ரூபாயின் வெளிமதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு கூடியதால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆனால், வெள்ளியன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம்: எதிர்பார்த்ததை போன்று, ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வெள்ளியன்று, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.உணவுப் பொருள் பணவீக்கம் 9.47 சதவீதமாக சற்று குறைந்திருந்தது என்றாலும், நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, ஜூலை மாதத்தில், 9.22 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. பணவீக்கம் உயர்ந்துள்ள செய்தி வெளியானதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தும் என்று பலராலும் கணிக்கப்பட்டது. இந்த வட்டி விகித உயர்வால், வீட்டு வசதி, வாகனம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கும். இதனால், வீட்டு வசதி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. புதிய பங்கு வெளியீடு: திரைப்படம், ஆபரணம், உணவு மற்றும் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வரும் எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதன் பங்கு, வெளியீட்டு விலையை விட (58 ரூபாய்) 35 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டு, 33.25 ரூபாய்க்கு கைமாறியது. வரும் வாரம் எப்படி இருக்கும்? உலக நிலவரங்கள் நன்றாகவே உள்ளது. பங்குச் சந்தைகளை பாதிக்கும் அளவிற்கு இடர்பாடு அளிக்கும் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு, வெள்ளியன்று, வர்த்தகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரியும் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக உள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், பல நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நன்கு இருக்குமென எதிர்பார்க்கலாம். இது போன்ற காரணங்களால், வரும் வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் நன்கு இருக்குமென்றே சொல்லலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|