பதிவு செய்த நாள்
06 அக்2011
09:22
மதுரை : உலகளவில் "கோகோ' உற்பத்தியில் இந்தியாவின் பங்கு, 0.3 சதவீதம் மட்டுமே உள்ளது. உள்ளூர் தேவையை ஈடுகட்ட, ஊடுபயிர் "பாலிசி'யை அரசு தரப்பு கையில் எடுத்துள்ளது. சாக்லெட், உணவுப்பொருட்கள், பானங்கள், மருத்துவ பொருள் தயாரிக்க. மூலப்பொருள் "கோகோ' விதை.உலகளவில் கோகோ விதை உற்பத்தி செய்யும் நாடுகளில், ஐவரி கோஸ்ட் (12லட்சம் டன்), கானா (7.2 லட்சம் டன்), இந்தோனேஷியா (4.4 லட்சம்டன்), காமரூன் (1.75 லட்சம் டன்), நைஜீரியா (1.60 லட்சம் டன்) உள்ளன. இந்தியாவின் பங்கு 0.3 சதவீதம் மட்டுமே. உணவுப்பொருட்கள் அதிகம் உற்பத்தியாகும் இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் கோகோ தேவை 20 சதவீதம் அதிகரிக்கிறது. வெளிநாடுகளில் இறக்குமதியாவதன் மூலம் 70 சதவீதம் தேவை பூர்த்தியாகிறது. இதே நிலை தொடர்ந்தால், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்தியா விவசாயத்தில் கோகோவுக்கு முக்கியத்துவம் தரும் வேலைகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கோகோ விவசாயத்தை பிரபலமாக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2,500 எக்டர் பரபரப்பளவில் ஆண்டுதோறும் 200 டன் கோகோ விதைகள் உற்பத்தியாகின்றன. தென்னையின் ஊடுபயிராக பயிரிட்டு, உற்பத்தியை உயர்த்தும் முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் தென்கரை, குருவித்துறை, இரும்பாடி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியில் கோகோ ஊடுபயிர் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஒரு கிலோ விதைக்கு 165 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல "காட்பரீஸ்' நிறுவனம் நேரடி கொள்முதல் செய்கிறது. செடி ஒன்றில் ஒரு கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். அரசு மானியத்தில் விதை உரம், பூச்சிமருந்து கிடைக்கிறது. கருணாகரன் (விவசாயி, தென்கரை)கூறுகையில், ""கலெக்டர் பரிந்துரையில் ஊடுபயிராக கோகோ பயிரிட்டுள்ளேன். தென்னைக்கு ஊடுபயிராக இருப்பதால் பராமரிப்பு பணிகள் குறைவு. நேரடி கொள்முதலுக்கு ஏற்பாடு செய்துள்ளதால், துணிந்து பயிரிட்டேன்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|