பதிவு செய்த நாள்
08 அக்2011
01:53
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 191 கோடி டாலரை (9,168 கோடி ரூபாய்) எட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தை விட, 18 சதவீதம் (171 கோடி டாலர் - 8,208 கோடி ரூபாய்) அதிகமாகும். கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ள நிலையிலும், தனியார் பங்கு முதலீடு, அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்கு முதலீடு, சென்ற ஆண்டை விட, மதிப்பின் அடிப்படையில், மிதமான வளர்ச்சியையும், எண்ணிக்கை அடிப்படையில் சிறப்பான வளர்ச்சியையும் கண்டுள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், பல்வேறு நிறுவனங்கள், 9,168 கோடி ரூபாய்அளவிற்கு தனியார் பங்கு முதலீட்டை திரட்டிக் கொண்டுள்ளன. அதே சமயம், இதே காலத்தில், புதிய பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கிய 11 நிறுவனங்களால், 45 கோடியே 60 லட்சம் டாலரை (2,189 கோடி ரூபாய்) மட்டுமே திரட்டிக் கொள்ள முடிந்துள்ளது.எனினும், பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக, பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளின் மூலம் நிதி திரட்டிக் கொள்வதைத் தவிர்த்து, தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக, இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பங்கு வெளியீட்டிற்கு ஒப்புதல் பெற்ற பல நிறுவனங்கள், பங்குச் சந்தை சரியில்லாததால் அவற்றின் பங்கு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி'யின் அனுமதி பெற்ற 22 நிறுவனங்கள், அவற்றின் பங்கு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன. இந்த பட்டியலில், ஓ.என்.ஜி.சி., செயில், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், கிளென்மார்க் ஜெனரிக்ஸ், குஜராத் ஸ்டேட் பெட்ரோ கார்ப்பரேஷன், ரஹஜா யுனிவர்சல், ஸ்டெர்லைட் எனர்ஜி, ஜிந்தால் பவர், அவந்தா பவர் ஆகியவை அடங்கும். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அதன் புதிய பங்குவெளியீட்டை ஒத்தி வைத்து விட்டு, இன்டெல், எஸ்.வி.பீ இந்தியா மற்றும் செயிப் பார்ட்னர்ஸ் நிறுவனங்களின் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்துள் ளது.அது போன்று, மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், அதன் புதிய பங்கு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது. இந்நிறுவ னம், டி.ஏ.அசோசியேட்ஸ், செக்யூயா, சாண்ட்ஸ்டோன் பார்ட்னர்ஸ், மாடிசன் இந்தியா கேப்பிட்டல் ஆகிய நிறுவனங் களின் தனியார் பங்கு முதலீட்டை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு துணிகர முதலீட்டு திட்டத்தின் கீழ் முதலீடு செய்து விட்டு, பின்னர் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்கின்றன. இந்நிலை யில், பங்குச் சந்தை சரிவால், பங்கு வெளியீடுகள் குறைந்துள்ளதால், பல தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களுக்கு, அவற்றின் முதலீடுகளை உடனடியாக திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|