பதிவு செய்த நாள்
17 அக்2011
00:03
கோவை:"இந்தியாவில் ஆண்டுக்கு, 35 கோடி டன் கரும்பு விளைகிறது. இது, முக்கியமான வணிகப் பயிராக மாறி யுள்ளது,'' என, தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பதிவாளர் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையர் ராஜீவ் ரஞ்சன் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலுவலர்களின், 43வது கூட்டம், கோவையில் நடைபெற்றது. கரும்பு இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் சர்க்கரை ஆலைகள் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில், கரும்பு ரகங்களின் திறன் மற்றும் பாசன நீர் உபயோகத்திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பதிவாளர் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையர் ராஜீவ் ரஞ்சன் பேசியதாவது: இந்தியாவில் நெடுங்காலமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஏறத்தாழ, 50 லட்சம் எக் டேரில் ஆண்டுக்கு, 35 கோடி டன் கரும்பு உற்பத்தியாகிறது. வேளாண் துறை சார்ந்து இயங்குவதில், ஜவுளித் துறைக்கு அடுத்தபடியாக சர்க்கரை உற்பத்தி தான் இரண்டாவது பெரிய தொழிலாக உள்ளது. இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை, வங்காளத்தில் ஹுக்ளி நதிக்கரையில் 1784ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நாட்டில், 520க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்தியாவின் மொத்த கரும்பு உற்பத்தியில்,60சதவீதம் இந்த ஆலைகளில் அரைக் கப்பட்டு, அதன் மூலம், 2 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட, 9 மாநிலங்களில், 12 சதவிதத்துக்கும் அதிகமானோர் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த விளை நிலத்தில், 5 சதவிதம் கரும்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாயிரம் முதல், 15 ஆயிரம் கரும்பு உற்பத்தி யாளர்கள், 2.5 லட்சம் முதல், 15 லட்சம் டன் வரையில் கரும்பை உற்பத்தி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு தருகின்றனர். எண்ணிலடங்கா மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை தருவதோடு, கிராமங்களில் வசிக் கும் எளிய மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் கரும்பு உறுதுணையாக உள்ளது. தேசத்தின் வளர்ச்சியில், கரும்பு உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய அணுகு முறைகளைக் கையாண்டு கரும்பு விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, ராஜீவ் ரஞ்சன் பேசினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேச பூபதி, பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன், முதன்மை நிர்வாகி சோலைராஜன், கரும்பு இனப்பெருக்க நிலைய இயக்குனர் விஜயன் நாயர், தமிழ்நாடு வேளாண் பல்கலை இயக்குனர்கள் பரமாத்மா, தியாகராஜன், தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் முதன்மை கரும்பு அபிவிருத்தி அலுவலர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|