பதிவு செய்த நாள்
29 அக்2011
00:18
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. தீபாவளி விடு முறையை அடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறியதையடுத்து, முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சென்ற வியாழனன்று கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு தீர்வளிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் மத்தியில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. இந்த நிலை வெள்ளியன்றும் நீடித்திருந்தது. மேலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. இவற்றின் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து வங்கி, தகவல் தொழில்நுட்பம், சிமென்ட், மோட்டார் வாகனம், நுகர் பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்ச நிலையை எட்டின என்பது குறிப் பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 515.97 புள்ளிகள் அதிகரித்து, 17,804.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிக பட்சமாக, 17,908.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,671.86 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய மூன்று நிறுவன பங்குகளை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 158.90 புள்ளிகள் உயர்ந்து, 5,360.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,399.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,322.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|