பதிவு செய்த நாள்
04 டிச2011
09:29
வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளுக்கான பொது மக்கள் ஒதுக்கீடு, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்க, வகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மனைகளை உருவாக்கி, வீடுகளை கட்டி, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, குலுக்கல் முறையில் உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்வது, வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படை பணி.
இவற்றில், 85 சதவீதம் வாரியம் மூலமும், 15 சதவீதம் அரசின் நேரடி உத்தரவிலும் ஒதுக்கப்படுகின்றன. வாரியத்தின் ஒதுக்கீட்டு பங்கு, சமுதாயத்தில் பல்வேறு நிலையினரின் தேவைக்கேற்ப, 100 பங்குகளாக பிரித்து வழங்கப்படுகின்றன.
முதலீட்டாளர்களுக்கு 10 : இதில் சில மாற்றங்கள் செய்து, தமிழக அரசின் வீட்டுவசதித் துறை, அண்மையில் உத்தரவிட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை முதலீடு செய்தவர்களுக்கு, வீடு, மனை ஒதுக்கீட்டில், "முதலீட்டாளர்கள்' என்ற அடிப்படையில், 10 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
30 + 8 = பொது மக்கள் : தற்போது, முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், 8 சதவீதம், பொது மக்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 30 சதவீதமாக இருந்த பொது மக்களுக்கான ஒதுக்கீடு, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கான, 18 சதவீதத்தில், ஒரு பகுதியாகவே வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கான ஒதுக்கீடு இருந்தது. வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கு, நேரடியாக, 2 சதவீத ஒதுக்கீடு கிடைக்க, புதிய உத்தரவில் வகை செய்யப்பட்டுள்ளது. முதலீட்டுதாரர்களுக்கு, பொது மக்களுக்கான பிரிவிலேயே மனைகள் ஒதுக்கப்படும். இவர்களுக்கு என, தனியாக ஒதுக்கீடு இனி இருக்காது.
மாற்றுத் திறனாளிகளுக்கு... : ஆதிதிராவிடர்கள், மத்திய அரசு மற்றும் மாநில உள்ளாட்சி பணியாளர்கள், பொது மக்கள் ஆகிய பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகளில், 5 சதவீத பங்கு கலைஞர்களுக்கும்; 1 சதவீதம், அரசியல் ரீதியான பிரச்னைகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கும்; மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமும் ஒதுக்கப்படும். வீடுகள், மனைகள் எண்ணிக்கை அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை மற்றும் பிரதிநிதித்துவ அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் விருப்ப ஒதுக்கீடு? : கடந்த ஆட்சி காலத்தில், அரசின் ஒதுக்கீடான, 15 சதவீதம், தகுதியற்றவர்களுக்கு, விதிகளுக்கு மாறாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக, கடந்த ஜனவரி மாதம், சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், விருப்புரிமை ஒதுக்கீடு குறித்து எவ்வித முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்துக்கான, 85 சதவீத ஒதுக்கீட்டில் மாற்றம் செய்வது தொடர்பாக மட்டுமே, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|