பதிவு செய்த நாள்
21 டிச2011
00:07
புதுடில்லி: இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 2 லட்சத்து, 77 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இத்துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 313 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
இந்திய துறைமுகங்கள், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 87 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இதில், முக்கிய துறைமுகங்கள், 57 கோடி டன் சரக்கையும், இதர துறைமுகங்கள் 34 சதவீதம், அதாவது, 30 கோடி டன் சரக்கையும் கையாண்டுள்ளன. முக்கிய துறைமுகங்கள் கையாண்ட மொத்த சரக்குகளில், சென்னை, கன்ட்லா, விசாகப்பட்டினம் மற்றும் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகியவற்றின் பங்களிப்பு, 48.4 சதவீதமாகும்.நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80 சதவீதம், கடல் வழியாக நடைபெறுகிறது. இதில் 20 சதவீதம், சரக்கு பெட்டகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியாகும். இந்தியாவில், 12 பெரிய துறைமுகங்களும், 176 சிறிய துறைமுகங்களும் உள்ளன. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் அதிக அளவில் சரக்குகளை கையாண்டதில், சென்னை துறைமுகம், நான்காவது இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, துறைமுகங்களில், பெட்டகங்கள் வாயிலான சரக்குகளை கையாள்வது அதிகரித்து வருகிறது. வரும் 2020ம் நிதியாண்டில், இந்தியத் துறைமுகங்கள், 249 கோடி டன் சரக்குகளை கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றுமதி அதிகரித்து வருவதற்கேற்ப, துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். வரும் 2020ம் ஆண்டில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 313 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத்தை அடுத்து, தமிழகத்தில் தான் 1,076 கி.மீ. நீளமுள்ளகடலோரப் பகுதி உள்ளது. இம்மாநிலத்தில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன. மத்திய அரசின் கீழ் உள்ள ஒரே கார்ப்பரேட் துறைமுகம் என்ற சிறப்பை எண்ணூர் துறைமுகம் பெற்றுள்ளது.சென்னை துறைமுகத்தில், போதிய அளவிற்கு இணைப்பு சாலை வசதிகள் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையால், சரக்கு போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில், சென்னை - எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலை, ஸ்ரீபெரும்புதூரில் பெட்டக சரக்குகளை கையாள்வதற்கான பிரத்யேக மையம் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, சரக்கு போக்குவரத்து நெருக்கடி தீரும். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|