பதிவு செய்த நாள்
22 டிச2011
16:36
புதுடில்லி: இந்தியாவில், இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் உருக்குப் பொருள்கள் உற்பத்தி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 55 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் உற்பத்தி 6.60 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 6.25 கோடி டன்னாக இருந்தது என சர்வதேச உருக்கு சங்கம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இச்சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 170 உருக்கு நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. நவம்பர் மாதத்தில் உலக உருக்கு உற்பத்தி 1.1 சதவீதம் உயர்ந்து 11.60 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என இச்சங்கம் தெரிவித்துள்ளது. இது, ஜனவரி முதல் நவம்பர் வரையிலான் காலத்தில் 7.4 சதவீதம் வளர்ச்சி கண்டு 137.30 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. நவம்பர் மாதத்தில் இந்நாடு 4.99 கோடி டன் உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, 0.2 சதவீத வளர்ச்சியாகும். ஜப்பானின் உற்பத்தி 87 லட்சம் டன்னாகவும், கொரியாவின் உற்பத்தி 58 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் ஜெர்மனி உற்பத்தி செய்ய உருக்குப் பொருள்களின் அளவு 35 லட்சம் டன்னாகும். இது, 2010 நவம்பர் மாதத்தை காட்டிலும் 10 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் உற்பத்தி 12.3 சதவீதம் உயர்ந்து 26 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. துருக்கியின் உற்பத்தி 12.8 சதவீதம் அதிகரித்து 28 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 11.8 சதவீத வளர்ச்சியுடன் 72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் உருக்குப் பொருள்கள் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. அம்மாதத்தில் உலக அளவில் உருக்காலைகள் 73.4 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டுள்ளன. இது, 2010 நவம்பர் மாதத்தை விட 2.6 சதவீதம் குறைவு என சர்வதேச உருக்கு சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|