பதிவு செய்த நாள்
03 ஜன2012
00:06
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலையால், அங்கு காபியின் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவின் காபி ஏற்றுமதி, நடப்பு காலண்டர் ஆண்டில், 10 சதவீதம் குறையும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு, காபி ஏற்றுமதி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இத்தாலிக்கு காபி அதிகம் ஏற்றுமதியாகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், காபி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இந்தியாவின் காபி ஏற்றுமதி, சென்ற 2011ம் ஆண்டு, 19.8 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 46 ஆயிரத்து 28 டன்னாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2010ம் ஆண்டில், 2 லட்சத்து 88 ஆயிரத்து 741 டன்னாக இருந்தது. இதே ஆண்டுகளில், காபி மறு ஏற்றுமதி, 17.8 சதவீதம் அதிகரித்து, 45 ஆயிரத்து 365 டன்னில் இருந்து, 53 ஆயிரத்து 440 டன்னாக உயர்ந்திருந்தது.
இது குறித்து, கர்நாடக பெருந்தோட்ட சங்க தலைவர் மார்வின் ரோட்ரிகஸ் கூறும் போது, "சென்ற 2011ம் ஆண்டு, ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கான காபி ஏற்றுமதி நன்கு இருந்தது. மார்ச் வரையிலான காலாண்டில், காபிக்கு நல்ல விலையும் கிடைத்தது.
குறிப்பாக, இந்திய காபிக்கு முக்கிய சந்தையாக விளங்கும் இத்தாலியில், இன்ஸ்டன்ட் காபிக்கான தேவை அதிகம் இருந்தது. சென்ற ஆண்டு, இன்ஸ்டன்ட் காபி ஏற்றுமதி, 25.5 சதவீதம் உயர்ந்து, 45 ஆயிரத்து 596 டன்னாக அதிகரித்திருந்தது' என்றார்
சென்ற ஆண்டில், உள்நாட்டில் காபி உற்பத்தி சிறப்பாக இருந்த நிலையில், சர்வதேச அளவில் அதன் உற்பத்தி குறைந்திருந்தது. குறிப்பாக, சென்ற ஆண்டு, பிரேசிலில் காபி பயிர் தொடக்கக் காலம் என்பதாலும், கொலம்பியாவில் காபி உற்பத்தி சரிவடைந்தது.
இது, இந்திய காபி ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. சென்ற ஆண்டில், 4,859 கோடி ரூபாய் மதிப்பிற்கு, காபி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 64 சதவீதம் (2,963 கோடி ரூபாய்) அதிகம்.
நடப்பு ஆண்டில், பிரேசில், இந்தோனேஷியா மற்றும் வியட்னாம் நாடுகளின் காபி உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியட்னாம், அதன் புதிய காபி பருவத்தின் உற்பத்தியில், ஏற்கனவே 40 சதவீத அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தோனேஷியா, வரும் ஏப்ரல் மாதம் காபி அறுவடையை மேற்கொள்ள உள்ளது.
பிரேசிலில் வரும் ஜூன் மாதம் காபி அறுவடை தொடங்க உள்ளது. இந்நாடுகளின் ஏற்றுமதியாலும், ஐரோப்பிய நாடுகளின் தேவை குறைந்துள்ளதாலும், இந்தியாவின் காபி ஏற்றுமதி குறையும் என்று, இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் ராஜா கூறியதாவது:
சென்ற 2011-12ம் காபி பருவத்தில் (அக்.,-செப்.,), காபி உற்பத்தி, 6.6 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 1 ஆயிரம் டன்னில் இருந்து, 3 லட்சத்து 21 ஆயிரம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காபி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், நல்ல மழை பெய்துள்ளதால், உற்பத்தி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அரபிகா வகை காபி உற்பத்தி, 1 லட்சத்து 4 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 2 லட்சத்து 7 ஆயிரம் டன்னில் இருந்து, 2 லட்சத்து 17 ஆயிரம் டன்னாக உயரும் என தெரிகிறது. நடப்பு ஆண்டில், காபி விலையில் ஏற்பட்டுள்ள சரிவும், ஏற்றுமதியாளர்களை பாதித்துள்ளது. சென்ற காலண்டர் ஆண்டின் இறுதி காலாண்டில், சர்வதேச அளவில் காபி விலை சரிவடைந்தது.நடப்பு ஆண்டில், வரும் மாதங்களில், விலை மேலும் குறையும். தற்போது, ஒரு டன் ரோபஸ்டா வகை காபி விலை, 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,800 டாலராக உள்ளது.
இது, வரும் மாதங்களில், 1,700 டாலராக மேலும் சரிவடையும் என தெரிகிறது. இவ்வாறு ராஜேஷ் ராஜா கூறினார்
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|