பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:09
ஈரோடு: தைப் பொங்கலை முன்னிட்டு, ஈரோட்டில், கரும்பு அறுவடை மும்முரமாக துவங்கியுள்ளது. 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 220 ரூபாய்க்கு விலை போகிறது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தை என்றாலே, செங்கரும்பு, பொங்கல் பானை, மஞ்சள், பனங்கிழங்கு ஆகியவை தான் நினைவுக்கு வரும். கிராமங்களில் உறவினர்கள், நண்பர்கள் பட்டாளத்துடன், வீட்டு வாசலில் பல்வேறு வண்ண கோலமிட்டு, கரும்புகளால் தோரணமிட்டு, அதன் நடுவில் மண் பானையில் பொங்கல் வைப்பர். பொங்கி வரும் பொங்கலைப் போல, ஆண்டு முழுவதும் விவசாயம் வளமாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டும் என, சூரியக்கடவுளை வணங்குவர்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கரும்பு, மஞ்சள் போன்றவற்றின் அறுவடை பணி மும்முரமாகியுள்ளது. ஈரோட்டில், கொடுமுடி, ஊஞ்சலூர், வெள்ளோடு, பள்ளிபாளையம் சமயசங்கிலி, கரம்மேடு, சீராம்பாளையம் உள்ளிட்ட காவிரிக்கரையோர பகுதியில், கரும்பு அறுவடை பணி சூடுபிடித்துள்ளது. இங்கிருந்து குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்றாண்டு பொங்கலை விட, நடப்பாண்டு 20 கரும்பு கொண்ட கட்டின் விலை, 70 ரூபாய் அதிகரித்துள்ளது.ஈரோடு கரும்பு விவசாயிதங்கவேல் கூறுகையில், ''நல்ல பருவ மழையால், நடப்பாண்டு கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. சென்றாண்டு, வியாபாரிகள் நேரடியாக வந்து ஒரு கரும்பு ஐந்து ரூபாய்க்கும், ஒரு கட்டு, 150 ரூபாய்க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது, ஒரு கரும்பு 11 ரூபாய்க்கும், கட்டுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 220 ரூபாய்க்கும் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.
சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி கரும்பு வியாபாரி முத்துசாமி கூறியதாவது:ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு நேரடியாக சென்று, விவசாயிகளிடம் விலை பேசுகிறோம். நடப்பாண்டு நல்ல பருவமழை காரண மாக கரும்பு, நல்ல திடமாகவும், இனிப்பாகவும் உள்ளது. இதனால், விவசாயிகளும் அதிக விலை எதிர்பார்க்கின்றனர். நடப்பாண்டு கரும்பு விலை கட்டுக்கு, 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், குஜராத், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கரும்பு அனுப்பப்படுகிறது.வண்டி கணக்குப்படி, 20 கட்டுக்கு, 5,000 முதல் 5,600 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறோம். வெட்டுக் கூலி, லாரி வாடகை என, செலவுகள் போக, கட்டுக்கு, 80 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|