பதிவு செய்த நாள்
14 ஜன2012
01:14
மும்பை:கடந்த ஆண்டு, சரிவடைந்திருந்த கிராம்பு விலை, இறக்குமதி செலவு கூடியதையடுத்து, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.கடந்த ஆண்டு, நாகர்கோவில் மொத்த விலை சந்தையில், 1,050 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ கிராம்பு, கடந்த சில வாரங்களாக, 800 ரூபாயாக குறைந்திருந்தது. இந்த அளவிற்கு விலை குறைந்திருந்த போதிலும், கிராம்பை வாங்க சில்லரை வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
சர்வதேச சந்தை:கடந்த ஆண்டு, சர்வதேச சந்தையில் கிராம்பு விலை சரிவடைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரக்கு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது.
ஸான்சிபார் நாட்டில் கிராம்பு கையிருப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. அது போன்று காமரோஸ் நாடும், உற்பத்தி செய்த கிராம்பு அனைத்தையும் விற்பனை செய்து விட்டது. கொலம்போவில் இயற்கை இடர்பாடுகளால், கிராம்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கிராம்பை அதிக அளவில் பயன்படுத்தும் இந்தோனேஷியா, அதன் தேவைக்கு, மடகாஸ்கர் நாட்டில் உற்பத்தியாகும் மொத்த கிராம்பை எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் கிராம்பு உற்பத்தியும் 5-10 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில், ஒரு டன் கிராம்புவிற்கான தேவை உயர்ந்து, அதன் விலை, 11 ஆயிரம் டாலரில் இருந்து, 13 ஆயிரம் டாலராக அதிகரித்துள்ளது.இதன் காரணமாகவும், கடந்த ஆறு மாத காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாலும், கிராம்பு இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும், ஒரு கிலோ கிராம்பு, 800 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள், உள்நாட்டிலேயே, குறிப்பாக நாகர்கோவில் மற்றும் பெங்களூரு சந்தைகளில் இருந்து, அதிகளவில் கிராம்பை வாங்கி வருகின்றனர். இதனால், ஒரு கிலோ கிராம்பு, 900 ரூபாய் வரை விலை போவதாக நாகர்கோவில் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி:இந்தியா, அதிக அளவில் கிராம்பை இறக்குமதி செய்து வரும் போதிலும், அதற்கு நிகரான அளவிற்கு ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகிறது. சென்ற 2011ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து 3,000 டன் கிராம்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இயற்கை இடர்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நடப்பு பருவத்தில் நாட்டின் கிராம்பு உற்பத்தி குறையும் என, இந்திய கிராம்பு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து நாகர்கோவிலை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "வழக்கமாக ஓராண்டு இடைவெளியில், கிராம்பு மகசூல் சிறப்பாக இருக்கும். ஆனால், நடப்பாண்டு, பல்வேறு காரணங்களால், இதன் உற்பத்தி 60-70 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
அவர் மேலும் கூறும்போது, கரும்பாறை, பரமலை, பல்மோர் மற்றும் பெல்மலை பகுதிகளில் கிராம்பு அதிக அளவில் விளைகிறது. இங்கு, பொதுவாக 1,000 -1,500 டன் வரை கிராம்பு உற்பத்தி இருக்கும். ஆனால், இது, தற்போது 600-800 டன் என்ற அளவிற்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இவ்வாண்டு, உள்நாட்டில் கிராம்பு உற்பத்தி 1,000-1,500 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு:கிராம்பு உற்பத்தியில் கேரளா, தமிழகம், ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. உள்நாட்டில் கிராம்பு உற்பத்தி குறையும் என்பதாலும், அதன் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாலும், தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிராம்பு விலை மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, உள்நாட்டு மொத்த விற்பனை சந்தையில், 900 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வரும் ஒரு கிலோ கிராம்பு, அடுத்து வரும் நாட்களில் 1,000 ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|