பதிவு செய்த நாள்
18 ஜன2012
00:07
புதுடில்லி: வரும் 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டீ.பி) 8 சதவீதமாக இருக்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார சுணக்க நிலை, உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதம் என்ற அளவில் தான் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதம் என்ற அளவில் நிலை நிறுத்தும் வகையில், பட்ஜெட்டில் போதுமான அளவிற்கு திட்டங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்ட மந்த நிலை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக குறையும் என, கடந்த மாதம் மத்திய அரசு மறுமதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து போனது.அடிப்படை கட்டுமான துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீடுகள் குறைந்து போனது. இந்நிலையில், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மேற்கண்ட துறையில் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் இருக்கும் என நம்புவதாக, அலுவாலியா மேலும் கூறினார்.பல பொதுத் துறை நிறுவனங்களிடம், அதிகளவில் ரொக்க இருப்பு உள்ளது. எனவே, இது போன்ற நிறுவனங்கள் எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில், முதலீடு மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.இந்நிலையில், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.7 சதவீதம் என்ற அளவிலும், 2012-13ம் நிதியாண்டில், 7.9 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என, யு.என். அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|