பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:04
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து மூன்று வாரங்களாக, எதிர்மறை வளர்ச்சியை கண்டு பணவாட்டம் என்ற நிலையில் உள்ளது.
இது, இவ்வாண்டின் முதல் வாரமான ஜன., 7ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், -0.42 சதவீதம் என்ற அளவில் பின்னடைவில் இருந்து பணவீக்கத்தை நோக்கி உயர்ந்துள்ளது. உணவுப் பொருள் பணவீக்கம் இதற்கு முந்தைய வாரத்தில், -2.90 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் ஆண்டுக் கணக்கில், வெங்காயத்தின் விலை, 75.42 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து காணப்பட்டது. உருளைக்கிழங்கு (23.84 சதவீதம்), கோதுமை (3.57 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது. காய்கறிகளின் விலையும் 45.81 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.அதேசமயம், புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளின் விலை 14.27 சதவீதம் உயர்ந்திருந்தது. இதையடுத்து, பால் விலை (11.48 சதவீதம்), மீன்,முட்டை, இறைச்சி (19.64 சதவீதம்), பழங்கள் (10.03 சதவீதம்), உணவு தானியங்கள் (2.26 சதவீதம்) ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது.
முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம் 2.47 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 0.51 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
உணவு சாரா பொருட்களின் கீழ், நூலிழை மற்றும் எண்ணெய் வித்துக்கள் விலை 1.89 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 1.29 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 14.45 சதவீதம் என்ற அளவிலேயே எந்த வித மாற்றமுமின்றி இருந்தது.
தற்போது, உணவுப் பணவீக்கம், நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் பணவீக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், நாட்டின் பொதுப் பணவீக்கம் வரும் மார்ச் மாதத்திற்குள் 6-7 சதவீதம் என்ற அளவில் குறையும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|