பதிவு செய்த நாள்
31 ஜன2012
01:53
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையன்று மோசமாக இருந்தது. ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில், பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகளிலும், பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நடப்பு 2012ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில், 27ம் தேதி வரையிலுமாக, பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது.
இக்காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 800 புள்ளிகள் அதிகரித்திருந்தது. அன்னிய நிதி நிறுவனங்களும், இந்திய பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டன. இதுபோன்ற காரணங்களால், இதுவரை பங்கு வர்த்தகத்தில் எழுச்சி நிலை காணப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டார்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 370.68 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 16,863.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,138.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,828.33 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 117.40 புள்ளிகள் சரிவடைந்து, 5,087.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,166.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,076.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|