பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:56
தஞ்சாவூர்:தஞ்சாவூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 510 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என, மொத்தம், 17 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
தஞ்சாவூரை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, 500 பேர் பணிபுரிகின்றனர்.இந்த ஆலையை நம்பி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 14 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இரண்டு கரும்பு அரவை பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும், ஐந்து லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள, 17 சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.நேற்றும் மூன்றாம் நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால், தினமும் ஒரு ஆலைக்கு, 10 கோடி வீதம், 17 ஆலைகளுக்கு, 170 கோடி ரூபாய் மதிப்பிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த, மூன்று நாளில், 17 ஆலைகளிலும், 510 கோடி மதிப்பில் கரும்பு அரைவை பாதித்துள்ளது என, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் செல்வராஜ், சங்கச்செயலர் ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.குருங்குளம் சர்க்கரை ஆலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், தினமும், 2,500 சர்க்கரை மூட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளது.சுற்றுவட்டார விவசாயிகள் கரும்பு அரவை செய்ய, 50 கி.மீ., தூரத்தில் உள்ள திருமண்டக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் ஆலைகளுக்கு செல்கின்றனர். இதனால், கூடுதல் போக்குவரத்து செலவு, தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|